பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி263

     கோபாலால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ‘‘சரி! உங்கிட்டப்
பேசிப் பிரயோசனம் இல்லே! போயிட்டு வா!’’ என்றான் கோபால்.

     முத்துக்குமரன் கோலாலும்பூரில் மேலும் இரண்டு நாடகங்கள் நடித்தான்.
அதற்குள் கோபால் எழுந்து நடமாடத் தொடங்கி விட்டான். இரண்டாவது
நாள் நாடகத்தை, கோபாலும் சபையில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்தான்.
அவனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை. முத்துக்குமரனின் நடிப்பைப் பார்த்து
அவன் மூக்கில் விரலை வைத்தான்.

     நாடகம் முடிந்ததும் முத்துக்குமரனைக் கட்டித் தழுவிப் பாராட்டினான்
கோபால். மறு நாள் ரேடியோவுக்கும் டெலிவிஷனுக்கும் அவர்கள்
பேட்டியளித்தார்கள். பேட்டிக்கு முத்துக்குமரன், கோபால், மாதவி மூவரும்
சென்றார்கள். இன்னொரு நாள் சுற்றிப் பார்ப்பதில், வேண்டியவர்களிடம்
சொல்லி விடை பெற்றுக் கொள்வதில் கழிந்தது. புறப்படுகிற தினத்தன்று
மரீலின் ஹோட்டலில் கோபால் குழுவினருக்கு ஒரு ஸெண்ட் - ஆஃப்
பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதில் எல்லாருமே முத்துக்குமரனை வாயாரப்
புகழ்ந்தனர். உபசாரத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது கோபால் கூட
முத்துக்குமரனையே பாராட்டிப் பேசினான். மாதவி விழாவில் குழுவினரின்
சார்பில் ஒரு பாட்டுப் பாடினாள். ‘ஒளி படைத்த கண்ணினாய் வா
வா’...பாடும்போது அவள் கண்கள் எதிரே உள்ள வரிசையில் அமர்ந்திருந்த
முத்துக்குமரனையே பார்த்தன.

     வழக்கம்போல் சிங்கப்பூருக்கு யார் யார் விமானத்தில் போவது என்ற
பிரச்னை வந்தபோது முத்துக்குமரனும், மாதவியும் மறுத்துவிட்டனர்.

     ‘‘அப்படியானால் நானும் ப்ளேன்ல போகலே. உங்களோட கார்லியே
வரேன்’’ - என்றான் கோபால். கால் சரியாகி எழுந்திருந்தும் அவன் ‘வீக்’
ஆக இருந்தான்.