| 	 அவன் காரில் இருநூறு மைலுக்கு மேல் பயணம் செய்வதென்பது முடியாத     காரியம். எனவே முத்துக்குமரன் அவனை வற்புறுத்தி விமானத்திலேயே வரச்     சொல்ல வேண்டியதாயிற்று.                ‘‘இடங்களையும், இயற்கை வளத்தையும் நல்லாப் பார்க்கலாம்னுதான்     நாங்க ரெண்டு பேரும் கார்லே வரதாகச் சொல்கிறோம். அதை நீங்க யாரும்     வித்தியாசமா நெனைக்கக் கூடாது. நீ இப்ப இருக்கிற நிலைமையிலே கார்லே     வர லாய்க்குப்படாது. சொன்னாக் கேளு’’ - என்று முத்துக்குமரன் விளக்கிய     பின்பு கோபால் ஒப்புக் கொண்டான். அப்துல்லாவுக்கு இன்னும்     உதயரேகாவிடம் மயக்கம் தீரவில்லை. மூன்று பேரும் மலேஷியன் - ஏர்வேஸ்     விமானத்தில் சிங்கப்பூர் பறந்தார்கள். முத்துக்குமரன் உட்பட மற்றவர்கள்     ஜோகூர் வழியே கார்களில் சிங்கப்பூர் சென்றார்கள். ருத்ரபதி ரெட்டியார்     டிபன் காரியர்களில் பகலுணவு தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தார். நடுவே     ஓரிடத்தில் எல்லாரும் கார்களை நிறுத்திவிட்டுப் பகலுணவை ஓர் காட்டு     ஓடைக்கரையில் முடித்துக் கொண்டார்கள். பிரயாணம் மிகமிக இன்பமாக     இருந்தது. ஜோகூர் பாலம் தாண்டும்போது மாலை ஆறரை மணிக்கு     மேலாகிவிட்டது. இருட்டுகிற நேரத்தில் சிங்கப்பூர் மிக அழகாயிருந்தது.     குளிருக்கும் இருளுக்கும் பயந்து ஓர் அழகிய நவநாகரிக யுவதி ஒதுங்கி     ஒளிவது போல் நகரம் அந்த வேளையில் மங்கலாகவும் அழகாகவும் தெரிந்தது.     அவர்களுடைய கார்கள் புக்கிட்டிமா ரோட்டைக் கடந்து பென்குவின்     தெருவிலுள்ள ஓர் ஹோட்டலை அடையுமுன் நன்றாக இருட்டி விட்டது.     அட்டையில் அடுக்கிய மாதிரிப் பல மாடிகளைக் கொண்ட வானளாவிய ஒரே     மாதிரிக் கட்டிடங்கள் எங்கும் தென்பட்டன. ஊர் கோலாலும்பூரைவிடப்     பரபரப்பாகவும் வேகம் மிகுந்தும் காணப்பட்டது. கார்கள் சாலையில் எறும்பு     மொய்ப்பதுபோல் மொய்த்தன. மஞ்சள் நிற  	 |