இன்னிக்கும் இருக்கியா? அல்லது...’’ ‘‘சும்மா அதையே குத்திக்காட்டிப் பேசாதீங்க. இன்னிக்கி நான் எதுக்கும் யாருக்கும் பயப்படலே, அவருக்கு நீங்க என்ன பதில் சொல்லணுமோ அதைச் சொல்லலாம்.’’ அவள் குரலில் தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் அவனுக்கும் புரிந்தது. தொடர்ந்து போனில் ஒரே கேள்வியை மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்த கோபாலுக்கு முத்துக்குமரன் தீர்க்கமான - தெளிவான குரலில் பதில் கூறினான்: ‘‘ஆமா இங்கேதான் இருக்கா...’’ உடனே எதிர்ப்புறம் பதில் சொல்லாமல் டெலிபோன் ரெஸ்டில் ‘ணங்’ என்று வைக்கப்பட்டது. ‘‘இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன்; நீங்க இடம் கொடுத்தாத்தான் இங்கே தங்கலாம்னு!’’ ‘‘நெஞ்சிலேயே இடம் கொடுத்தாச்சி! இங்கே இடம் தர்ரத்துக்கு என்ன? பிடிவாதமா நீ கேட்டு வாங்கிக்கிட்டியே.’’ சிங்கப்பூரில் ஷாப்பிங் போனபோது வாங்கிக் கொண்டு வந்த ஸெண்ட்டை விமானத்திற்குப் புறப்படுமுன் பூசியிருந்தாள் மாதவி. இருளில் அவள் ஒரு வனதேவதை போல் நறுமணத்தோடு எதிரே நிற்பதை அப்படியே புதிதாக அப்போதுதான் பார்ப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முத்துக்குமரன். ‘‘இந்தாங்க தலையணை...’’ ‘‘வேண்டாம்! எனக்கு ரொம்ப மெதுவான தலையணை வேண்டும்’’ - என்று அவளுடைய தங்க நிறத்தோளைத் தொட்டுக் காண்பித்துக் குறும்புத்தனமாகச் சிரித்தான் அவன். ‘‘சரிதான்! இந்த வீட்டிலே இந்த ஒரு ரூம்லியாவது பாதுகாப்புக் கிடைக்கும்னு நினைச்சேன். இதுவும் மோச |