| 	 மாகப் பயன்படுத்துகிற வாய்ப்பையோ, வசதியையோ முத்துக்குமரன்     அறிந்ததில்லை. நவீன வாழ்க்கையில் சென்னையைப் போன்ற ஒரு நகரத்தில்     அதன் அவசியத்தை இப்போது அவன் நன்றாக உணர முடிந்தது.     வாழ்க்கையின் வேகமே மதுரைக்கும் சென்னைக்குமிடையே வேறுபட்டது.     ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று கார்களும்     லாரிகளும் சீறிப் பாய்கிற ரோட்டிற்கு வந்தால் தடுமாற நேரிடுகிற மாதிரி     சென்னையின் பரபரப்பிற்கும் வேகத்திற்கும் அவன் சுறுசுறுப்பாகத் தயாராக     வேண்டியிருந்தது. டெலிஃபோனில் ஒருவரிடம் நேரில் பேசுகிற மாதிரியே     சிரித்தும் மலர்ந்தும் கோபித்தும் குலாவியும், சுபாவமாகப் பேசுவதற்கு     அவனுக்கு வரவில்லை. போட்டோவுக்கு நிற்கிற மாதிரி ஒரு செயற்கை     உணர்வுடனேயே பேச வந்தது அவனுக்கு. கோபாலோ, மாதவியோ ஃபோனில்     பேசும் போது அப்படிச் செயற்கை எதுவுமில்லாமல சுபாவமாயிருப்பதையும்     அவன் கவனித்தான். தானும் அப்படி ஃபோனில் பேசிப் பழகிவிட அவனுக்கும்     ஆசையாகத் தான் இருந்தது. பல விஷயங்களில் அவனுக்குள் அகம்பாவம்     நிரம்பியிருந்தாலும் சில விஷயங்களில் அவன் சென்னையின் சூழ்நிலையில்     அகம்பாவப்பட முடியாமலும் இருந்தது.                நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்னும் எதை எழுதுவது என்பது     பிடிபடவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு பகல் உணவையும்     முடித்தாயிற்று. கோபால் ஸ்டூடியோவிலிருந்து ஃபோன் செய்தான்.                ‘‘மூணு மணிக்கு நீ தயாராய் இருக்கணும் வாத்தியாரே! நம்ம புது     நாடகத்தைப்பத்தி பேசறத்துக்காகச் சாயங்காலம் நாலு நாலரை மணி சுமாருக்கு     எல்லா ப்ரஸ் ரிப்போட்டர்ஸையும் வரச்சொல்லியிருக்கேன். ஒரு சின்ன டீ     பார்ட்டி. அப்புறம் எல்லாரும் புது  	 |