| இந்தியாவிலேயே தயாரித்திருக்க முடியாதுன்னு’ பதில் சொல்லிவிடேன்.’’ ‘‘கேள்வியையும் சொல்லிப் பதிலையும் நீயே சொல்லிக் கொடுத்துப்புட்டே...அப்படித்தானே?’’ ‘‘ஆமாம்! நீ என்ன பதிலைச் சொன்னாலும் ‘மகோன்னதமான’ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்க, அது போதும்... ‘‘மகோன்னதமான கோபால் குழுவினரின் மகோன்னதமான வரலாற்று நாடகம் மகோன்னதமாக வர இருக்கிறாக்கும்...?’’ ‘‘கிண்டல் வேண்டாம்; ஸீரியஸ்ஸாகவே சொல்றேன் நான்...’’ ‘‘ரெண்டுக்கும் வித்தியாசம் இங்கே எப்பவும் புரிய மாட்டேங்குது? எது ஸீரியஸ்? எது கிண்டல்னே தெரியலே கிண்டலானதையும் ஸீரியஸ்ஸாகச் சொல்றாங்க இங்கே?’’ ‘‘அது இருக்கட்டும்! நீ தயாராயிரு. நானும் மூணு மணிக்கு வந்திடுவேன், மாதவியைக்கூடக் கொஞ்சம் முன்னாடியே வரச்சொல்லி ஃபோன் பண்ணியிருக்கேன்’’ - என்று கூறிப் பேச்சை முடித்தான் கோபால்; முத்துக்குமரனோ மனத்தில் கோபாலை வியக்கத் தொடங்கினான். சென்னைக்கு வந்து சேர்ந்தபின் இந்தக் கோபால் தான் வாழ்க்கையை எவ்வளவு வேகமாகப் படித்திருக்கிறான்! இத்தனை உலகியலை இவன் எப்போது கற்றான்? இவ்வளவு சமயோசிதத்தை இவன் எப்படிப் படித்தான்? யாரிடம் படித்தான்? சமயத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் இந்த அரசியல் சாணாக்கியம் கலை வாழ்விலேயே இவனுக்குக் கிடைத்திருப்பது பெரிய |