பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி51

ஆச்சிரயம்தான்! - என்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு.

     காலையில் நாடகம் எழுதச் சொல்லிவிட்டுப் பகலில்
பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு விளம்பரம் செய்யும் இந்தச் சாமார்த்தியமும்,
வேகமும்தான் பட்டினத்தில் வெற்றி பெற வழிகள் போலும் என்று ஒரு கணம்
அவனுக்குள்ளேயே ஒரு மலைப்பு உண்டாயிற்று. ஒரு திறமையான
காரியத்தைச் செய்வதோடு ஒடுங்கிவிடாமல் ‘நான் செய்வதுதான் திறமையான
காரியம்’ - என பத்துப் பேரைக் கூப்பிட்டு வைத்து விருந்துபசாரத்தோடு
அழுத்திக் கூறி அனுப்பும் சாமர்த்தியமும் இந்த நகரில் வேண்டும் போலும்
என்று நினைத்துக் கொண்டான் அவன். பகல் இரண்டு மணியிலிருந்து ஒரு
முக்கால் மணி நேரம் படுக்கையில் படுத்துப் புரள்வதில் கழிந்தது. தூக்கமும்
வரவில்லை. நாயர்ப்பையன் கொண்டு வந்து போட்டிருந்த தமிழ் காலைத்
தினசரியைப் படிப்பதில் அந்த நேரம் போயிற்று.

     இரண்டே முக்கால் மணிக்கு எழுந்து முகம்கழுவி உடை மாற்றிக்கொண்டு
தயாரானான் அவன். அறைக் கதவை யாரோ மெல்லத் தட்டினார்கள்.

     முத்துக்குமரன் கதவைத் திறந்தான். மல்லிகைப் பூ வாசனை குப்பென்று
வந்து தாக்கியது. பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள் மாதவி,
இதழ்களில் ‘லிப்ஸ்டிக்’கைப் பூசி அழித்தது போலிருந்தது. முத்துக்குமரன்
முகம் மலர்ந்து அவளை வரவேற்றான்.

     ‘‘நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்...’’

     ‘‘எப்படி?’’

     ‘‘கதவைத் தட்டிய விதம் மிக நளினமாக மிருதங்கம் வாசிப்பது போல்
இருந்தது.’’