பக்கம் எண் :

52சமுதாய வீதி

     ‘‘வளை ஒலிகூடக் கேட்டிருக்கலாமே?’’

     - கேட்டது என்று பதில் சொல்லலாமா, கேட்கவில்லை என்று
சொல்லலாமா என ஒருகணம் தயங்கி அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல்,

     ‘‘கேட்டதே!’’ என்றான் முத்துக்குமரன்.

     ‘‘பெண்களின் கை வளைகள் ஒலிக்கும்போது கவிஞர்களுக்குக் கற்பனை
பெருகுமென்கிறார்களே? உங்களுக்கு ஒன்றும் கற்பனை தோன்றவில்லையா?’’

     - இந்தக் கேள்வியின் துணிவிலும் துடுக்குத்தனத்திலும் அயர்ந்துவிட்ட
முத்துக்குமரன் தன்னைச் சமாளித்துக் கொண்டு மறுமொழி கூறச் சிறிது
நேரமாயிற்று.

     ‘‘பிரத்யட்சமே நேரில் வந்து விட்டபின் கற்பனை எதற்கு மாதவி?’’

     அவள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள்.
அந்த அலங்காரத்தில் ஒரு வனதேவதைபோல் அவள் அவனை
மயக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பருகிவிடுவதுபோல் பார்த்தான்.

     ‘‘என்ன பார்க்கிறீர்கள்...?’’

     ‘‘ஒன்றுமில்லை. கதாநாயகி எப்படி இருக்கிறாள் என்று பார்த்தேன்?’’

     அவள் முகம் சிவந்தது.

     வாயிற் பக்கம் யாரோ மெல்லக் கனைத்துச் செருமும் ஒலி கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கோபால் சிரித்தபடி நின்று
கொண்டிருந்தான்.

     ‘‘உள்ளே வரலாமா?’’

     ‘‘இதென்னடா கேள்வி? வாயேன்.’’

     ‘‘அதுக்கில்லே! ரெண்டு பேரும் ஏதோ குஷாலாப் பேசிக்கிட்டிருக்கீங்க.
மூணாவது ஆளும் கலந்துக்க