பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி53

முடிஞ்ச பேச்சா அல்லது ரெண்டு பேர் மட்டுமே பேசற பேச்சான்னு
தெரியலியே?’’

     ‘‘எந்த ரெண்டு பேர் பேச்சிலும் மூணாவது ஆள் கலந்துக்கலாம்...’’

     ‘‘ஒண்ணுலே மட்டும் முடியாது.’’

     ‘‘எதுலே?’’

     ‘‘காதலர்கள் பேச்சிலே...!’’

     கோபால் இப்படிக் கூறியதை மாதவி தவறாக எடுத்துக்
கொள்ளப்போகிறாளே என்ற தயக்கத்தோடும், பயத்தோடும் அவள் முகத்தைப்
பார்த்தான் முத்துக்குமரன். அவள் குறும்புச் சிரிப்புச் சிரித்துக்
கொண்டிருந்தாள். கோபால் அப்படிச் சொல்லியதிலே அவளுக்கும் உள்ளூற
மகிழ்ச்சிதான் என்று தெரிந்தது.

     கோபாலும் திருமணமாகாதவன். மாதவியும் திருமணமாகாதவள்; தானும்
திருமணமாகாதவன் - என்றெண்ணி மூவரும் இப்படி வெளிப்டையாகத்
துணிந்து காதலைப் பற்றிச் சிரித்துப் பேசவும், உறவு கொண்டாடவும்
முடிவதையும் எண்ணியபோது பட்டினத்துக் கலையுலகம் மிக மிகத் துணிந்து
முன்னேறியிருப்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. அந்தத் துணிவுக்கும்,
வேகத்துக்கும் ஏற்ப உடனே தயாராக முடியாமல் திணறினான் அவன். எல்லாம்
கனவு போலிருந்தது அவனுக்கு. மூன்றரை மணிக்கு அவனும், கோபாலும்,
மாதவியும் தோட்டத்துக்கு வந்தார்கள். தோட்டத்தில் விருந்துபசாரத்துக்கு
வெள்ளை விரிப்புடன் கூடிய மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
மேஜைகளில் பூக்கள் சொருகிய ஜாடிகளும், கிளாஸ்களும் வரிசை
பிடித்ததுபோல் அழகாக அளவாக வைக்கப்பட்டிருந்தன.

     ஒவ்வொருவராக வரவர அவர்களை முத்துக்குமரனுக்கு அறிமுகப்படுத்தி
வைத்தான் கோபால். மாதவி சுற்