பக்கம் எண் :

64சமுதாய வீதி

அவள். அவள் அப்படிப் பிரியத்தோடும், பாசத்தோடும் தன்னை
நெருங்குவதையும் பழகுவதும் அவன் மனத்தில் கர்வத்தை வளர்த்தன.
அவளுடைய மனத்தை வென்று தன் பக்கமாகச் சேர்த்துக் கொண்டதற்காக
அவன் உண்மையிலேயே கர்வப்படத் தகுந்தவனாகத்தான் இருந்தான்.
பத்தேகால் மணிக்கு நாயர்ப்பையன் முன்னால் வழி காட்டி அழைத்துக்
கொண்டுவர, காக்கி உடையணிந்த - டைப்ரைட்டிங் மெஷின் கம்பெனியின்
ஆள் ஒருவன் - புதிய தமிழ்த் தட்டெழுத்து மெஷினைக் கொண்டுவந்து
வைத்து விட்டுச் சென்றான்.

     ‘‘ஸ்கிரிப்ட்டைத் தர்ரீங்களா?டைப் செய்யத் தொடங்கலாம்னு
பார்க்கிறேன்...’’என்று மாதவி மெஷினைத் திறந்து புது ரிப்பனை மாட்டிக்
கொண்டே அவனைக் கேட்டாள்.

     அப்போது ஸ்டூடியோவுக்குப் புறப்படத் தயாராகிவிட்டக் கோலத்தில்
கோபால் வந்தான்.

     ‘‘டைப்ரைட்டர் ரெடி! உன் கதாநாயகியும் ரெடி...! இனிமேலாவது நீ
வேகமாக நாடகத்தை எழுதணும் வாத்தியாரே.’’

     ‘‘முதல் காட்சி ரொம்ப நல்லா வந்திருக்குடா கோபால். நாடகம் நல்லபடி
முடியும்கிறதுக்கு இதுவே நல்ல அடையாளம்.’’-

     ‘‘சபாஷ்! வேகமா எழுது! இப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன்.
சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். சாயங்காலம் பார்க்கிறேன்
வாத்தியாரே?’’ - என்று கூறிவிட்டு மாதவியின் பக்கம் திரும்பி,

     ‘‘ஒன் பிளஸ் டூ அல்லது வந்தால் ஒன் பிளஸ் திரீ எடு. மேலே
தேவையானா அப்புறம் எடுக்கலாம்! நீ உற்சாகப்படுத்தற ‘ஜோர்’ல தான்
வாத்தியார் நாடகத்தை முடிக்கணுமாக்கும்...’’ - என்று சொல்லிச் சென்றான்
கோபால்.