| பவன் கோபால். அவனிடம் அவளுக்கு மரியாதையும், பயமும் இருப்பதை தப்பாக நினைக்க முடியாது. ஆயினும், மெதுவான குரலில் புறப்படுவதற்கு முன் பதற்றத்தோடு அவள் கூறிய அந்தச் சொற்களை அவனால் மறக்கவே முடியவில்லை. அவன் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபால் வீட்டிலில்லை. ஏதோ அல்ஜீரியக் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி ஒன்றைக் காண்பதற்காக அண்ணாமலை மன்றத்திற்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. திரும்பி வந்தவுடன் முத்துக்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு மணி நேரம் எழுதிவிட்டு அப்புறம் உறங்கப் போகலாம் என்று தோன்றியது. ஏற்கனவே, எழுதி முடித்தவரை நாடகப் பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டு மேலே எழுதத் தொடங்கினான். எழுதினவரை ஸ்கிரிப்டை மாதவி தெளிவாகத் தமிழ்த் தட்டெழுத்துப் பிரதி எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்ததனால் படிக்க வசதியாயிருந்தது. எழுதி முடித்த பகுதிகளைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பின்பே மேலே எழுத வேண்டிய பகுதிகளை எழுதத் தொடங்குவது அவன் வழக்கம். எழுதிக் கொண்டிருந்தே போதே கோபால் அண்ணாமலை மன்றத்திலிருந்து திரும்பியதும் தன்னை ஃபோனில் கூப்பிட்டாலும் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே எழுதினான். ஆனால் அவன் எழுத முடிந்தவரை எழுதிவிட்டுத் தூங்கப் போகிறவரை கோபால் திரும்பி வந்தானா வரவில்லையா என்பதைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. காலையில் முத்துக்குமரன் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்தபோது கோபால் அங்கே வந்தான். ‘‘என்ன? வாத்தியாருக்கு நேத்து ரொம்ப அலைச்சல் போலேருக்கு. எலியட்ஸ் பீச், விருந்துச் சாப்பாடுன்னு ஒரே ‘பிஸி’ன்னு கேள்விப்பட்டேன்...’’ |