மனோன்மணீயம்
24

ஓம்

கடவுள் துணை.

மனோன்மணீயம்
பாயிரம்

கடவுள் வணக்கம்

நேரிசை வெண்பா

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்
போதமும் போய்த்தீண்டாப் பூரணமே - பேதமற
வந்தெனைநீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்காற்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

தமிழ்த் தெய்வ வணக்கம்
பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.
இவை யிரண்டும் ஆறடித்தரவு.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே,  (1)

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.  (2)

இவை பன்னிரண்டும் தாழிசை.

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
(1)