| | ஒருமொழி வேண்டினர் ; உரைத்திலேன் பாவி ! |
| 125. | நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. |
| | பிச்சியான், ஓகோ ! பேசினே னிலையே ! |
| | இனியென் செய்வேன்? என்நினைப் பாரோ? |
| | மனவரா வண்ணமென் னனையு முரைத்தாள். |
| | ஊர்வரா வண்ணங் குடிலனு மோட்டினன். |
| 130. | யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? |
| | உயிரே யெனக்கிங் கொருதுணை. |
| | அயிரா வதத்தனு மறியா வமுதே ! (அழ) | 22 |
| | |
| மனோன், | | அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமு நெரிஞ்சிலா |
| | அஞ்சிய அடியாய் ! அழுங்கலை ! அழுதுகண் |
| 135. | அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் |
| | கறுத்ததே ! ஏனிது ! கருணைக் கடவுணின் |
| | கருத்தே முடிப்பக் காண்டி. அஃதோ |
| | மணங்கமழ் கோதையர் வந்தனர். |
| | அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே ! |
| | (செவிலியும் தோழிப் பெண்களும் வர) |
| | |
| செவிலி, | 140. | தாயே ! வந்துபார் ! நீயே வளர்த்த |
| | முல்லையு நறுமுகை முகிழ்த்தது, வல்லை |
| | காதலிற் கவிழ்வை போலும் ! |
| | போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே ! | 24 |
| | |
| மனோன், | | போடி ! நீ யாது புகன்றனை தவத்தை |
| 145. | நாடிநா னிருக்க நணுகுமோ வென்மனந் |
| | துச்சமா மிச்சையாற் சோர்வு? |
| | நெருப்பையுங் கறையா னரிக்குமோ நேர்ந்தே ! |
| | |
| முதற்றோழி. | | பொய்யன் றம்ம ! மையுண் கண்ணால் |
| | வந்துநீ நோக்கு சந்தமார் முல்லை |
| 150. | நிரம்ப வரும்பி நிற்குந் தன்மை. |