தமிழும் திரவிடமும் சமமா? |
கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மறையுண்டு வந்திருப்பத னாலும், ஆரியக் குலப் பிரிவினையால் தமிழும் தமிழரும் தாழ்த்தப்பட் டிருப்பதனாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட பல்வேறு துறைபற்றிய ஆயிரக்கணக்கான தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் இயற்கையாலும் செயற்கையாலும் இறந்துபட்டமையாலும், மொழியாராய்ச்சி இதுபோது சரியான முறையில் நடைபெறாமையாலும், தமிழைக் காட்டிக்கொடுக்கும் கோடரிக் காம்புகள் தலைமையிடம் பெற்றிருப்பதனாலும், அரசியலும் பல்கலைக்கழகங்களும் தமிழ்பற்றிய உண்மைகளை ஆராய்ந்தறிவதில் அக்கறை கொள்ளாமையாலும், தமிழின் தலைமை இன்னும் தமிழராலும் சரியாய் உணரப்பெறவில்லை. |
தமிழே திரவிடத்திற்கு மூலம் என்பது, பல்வேறு சான்றுகளால் தெள்ளத் தெளிய அறியக்கிடக்கின்றது. அச் சான்றுகளாவன :- |
1. வரலாறு கூறல் |
தமிழும் அதன் திரிபான திரவிடமும், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும், எங்கு என்று எவ்வாறு தோன்றினர் என்னும் வரலாற்றுக் குறிப்பு தமிழிலன்றி எத் திரவிட மொழியிலுமில்லை. |
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" | |
(சிலப். 11: 19-22) |
"முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" | |
(புறம். 9: 10, 11) |
"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" | |
(முல்லைக்கலி, 4) |
".......... தலைச் சங்கமிருந்தார் ........... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரை யென்ப." |