இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது: ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம். திரவிடன், திரவிட நாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப் போம். பின்பு தமிழு மிராது, தமிழனு மிரான், இந்தியா முழுதும் ஆரியமாய் விடும். | தமிழ், திரவிட மொழிகளைப்போல ஆரியச் சார்பு கொள்ளாமை யாலும், வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும், தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (Lingusitic autonomy) பெறுதல் வேண்டும். போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம். | .....திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தும், தமக்குத் தாமே முட்டுக்கட்டையிட்டுக் கொண்டது. இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை. | தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும், திராவிடம் என்னுஞ் சொல்லில் இல்லை. திராவிடம் பனிமலை (இமயம்)வரை பரவியுள்ளது. தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே. | தமிழ்நாடு பிரிந்தபின், குறைந்தபட்சம் தென்னாட்டுத் திரவிட ரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலனங்களில் (விஷயங்களில்) ஒரு கூட்டொப்பந்தம் செய்யும்போதே தி.மு.க. சொல்லும் திரவிடம் தோன்றும். அதற்கு இன்று தமிழர்மட்டுமே முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையே யாம். | இதுகாறுங் கூறியவற்றால், உண்மை நிலையை உள்ளவாறுணர்ந்து, நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு, எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றிபெறுதற் பொருட்டு, பொதுநலத்தை முன்வைத்து ஒற்றுமையாகப் போராடி, முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க. | ('தமிழ்' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து) | | |
|
|