பக்கம் எண் :

செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு3

     கொடுந்தமிழ் நிலங்கள் பன்னிரண்டாகக் கணக்கிடப்பட்டன.
  "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி."

(தொல். எச். 4.)

     தொல்காப்பியர் காலத்துப் பன்னிரு கொடுந்தமிழ் நிலம் எவை யென்பது திட்டமாகத் தெரியவில்லை.
  "தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன்வடக்கு-நன்றாய
சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"

 

  "சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே."

 

     என்னும் பிற்காலத்துப் பாடல்களும், அவற்றைத் தழுவிய
  "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப"

(நன். 273)

     என்னும் நன்னூல் நூற்பாவும், கொள்ளத்தக்கன வல்ல. அவற்றால் அறியக் கிடப்பதெல்லாம், ஒருகாலத்தில் இலங்கையுட்பட இந்தியா முழுதும் தமிழே வழங்கிற்று என்பதே.
செந்தமிழ் வரம்பீட்டின் நன்மை    
1. மொழிகெடாமை
     குமரிநாட்டு மொழியாகிய தமிழ் ஒன்றே, இன்று பல்வேறு வகையில் திரிந்து பதினெண் மொழியாகப் பிரிந்துள்ளது.
     எ-கா :
  தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு
  யான்,நான் ஞான் நேனு நானு யானு
  ஒன்று ஒன்னு ஒண்டு,ஒகட்டி ஒந்து ஒஞ்சி
  வா வா ரா பா பா
  மருந்து மருன்னு மந்து மர்து மர்து
     இங்ஙனம் சொற்களெல்லாம் திரியாதிருந்திருப்பின், திரவிட மொழிகளெல்லாம் இன்றும் தமிழாகவே வழங்கும்.
     தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ் வொரு திரவிடமொழி தெரித்தாள்வதும், தமிழின் திரவிடத் தாய்மையைக் காட்டும்.