பக்கம் எண் :

2தமிழியற் கட்டுரைகள்

    மேலும், ஆரியர் வந்தபின் தமிழ்மொழி வளர்ச்சியும் மொழி யாராய்ச்சியும் தடுக்கப்பட்டுவிட்டதனால், கால்டுவெலார் குறைகூறல் வலியற்றதாகின்றது.
செந்தமிழ் இயல்பு
    1. தூய்மை அல்லது பிறமொழிச் சொல்லின்மை.
    2. திருத்தம் அல்லது எழுத்தும் சொல்லும் ஒலிப்பிலும் எழுத்திலும் உரிய வடிவிலிருத்தல்.
    3. இலக்கணம் அல்லது சொற்றொடரமைப்பில் வழுவின்மை.
இம் மூவியல்பும் இல்லது கொடுந்தமிழ்.
    தெற்கே மூழ்கிப்போன பழம் பாண்டிநாட்டின் தென்கோடியில் இருந்த குமரிமலைத் தொடரின் தென் கொடுமுடி, பனிமலையளவு தொலைவி லிருந்ததனாலும், இறந்துபட்ட முதலிரு கழக நூல்கள் ஆயிரக்கணக்கின வாதலாலும், அக் காலத்துத் தென்சொல் வளம், குறைந்த பக்கம் இன்றுள்ளதுபோல் இருமடங்கினதாய் இருந்திருத்தல் வேண்டும். வணிக வாயிலாக வந்த வெளிநாட்டுப் பொருள்கட்கெல்லாம், உடனுடன் தமிழ்ப் பெயர்கள் புனையப்பட்டன.
செந்தமிழ் நிலம்
    செந்தமிழ் வழங்கிய நிலம் பெரும்பாலும் பாண்டிநாடாகவே யிருந்தது. தமிழ் தோன்றி வளர்ந்த நிலமும் முக்கழகமும் இருந்த நாடும் பாண்டி நாடேயென்றும், அவற்றைப் புரந்தவர் பாண்டியரே யென்றும் அறிதல் வேண்டும்.
    "வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும்" என்பது, பிற்காலத்துப் பொருளில் புனைந் துரையாம்.
செந்தமிழ்ச் சொல்வகை
    செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல் (Primitive), திரிசொல் (Derivative) என இரு வகைப்படுத்தப்பட்டன. எ-டு: வெள் என்பது இயற்சொல்; வெள்ளம், வெள்ளி, வெள்ளை, வெளி, வெளில், வெளிறு, வெளு என்பன திரிசொல்.
கொடுந்தமிழ் நிலமும் திசைச்சொல்லும்
    கொடுந்தமிழ் நிலங்களில் தனிச்சிறப்பாக வழங்கும் சொற்கள் (இக்காலத்து மேனாரிக்கம் என்னும் தெலுங்கச் சொல்லும் சமாளி என்னும் கன்னடச் சொல்லும் போல்வன), ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல திசையினின்றும் வந்தமைபற்றித் திசைச்சொல் (provincialism) எனப்பட்டன.