பொருந்துமாயினும், நிகழ்காலத்திற்கே சிறப்பாயுரியதென்று கொள்ளப் பட்டதென்க. |
அற்றேல், 'செய்துகொண்டு' என்னும் வாய்பாட்டுச் சொல் தொல் காப்பியத்தும் சங்க நூல்களிலும் காணப்படாமையின் பிற்காலத்துச் சொல்லென்று கொள்ளப்படுமெனின் அற்றன்று, உலக வழக்கும் செய்யுள் வழக்கும் எனச் சொற்கள் இரு தொகுதிப்பட்டு நிற்றலின், நீன் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் இற்றைத் தென்பாண்டி நாட்டிலும் கருநட நாட்டிலும் தொன்றுதொட்டு உலக வழக்காய் வழங்கி வரவும் அதன் கடைக் குறையான நீ என்னும் சொல்லே இலக்கண விலக்கியங்களிற் பயின்று வருதல்போல், 'செய்துகொண்டு' என்னும் சொல்லும் தொன்று தொட்டு உலக வழக்கில் இருந்துவரினும் அதற்கீடாக செய்து என்னும் இறந்தகால வினையெச்சமும் 'செய்தனன்' என்னும் முற்றெச்சமுமே 'செய்து கொண்டு' என்னும் நிகழ்கால வினையெச்சப் பொருளில் இலக்கிய வழக்காய் இருந்து வருகின்றன என்க. |
எ-கா : |
பாடி வந்தான், பாடினன் வந்தான் - இ. கா. |
பாடி வருகின்றான், பாடினன் வருகின்றான்- நி. கா. |
பாடி வருவான், பாடினன் வருவான் - எ. கா. |
இவற்றில் , பாடி என்பது பாடிக்கொண்டு என்று பொருள்படுதல் காண்க. |
இலக்கண விலக்கிய நூல்கள் எத்துணைப் பரந்துபட்டன வாயினும் அகர வரிசைச் சொற்களஞ்சியங்க ளல்லவென்றும் 'செய்துகொண்டு' என்னும் வினையெச்ச வாய்பாடு சங்க கால உலக வழக்கில்லை யென்பதற்கு யாதொரு சான்றும் இல்லையென்றும், அறிதல் வேண்டும். |
புலியாற் கொல்லப்பட்ட மருதன் என்றும், பேயாற் பிடிக்கப்பட்ட நாகன் என்றும் சொல்லற்கேற்ற செயப்பாட்டு வினை தமிழிலிருந்தும், புலிகொன்ற மருதன், பேய்பிடித்த நாகன் என்பனவே இயல்பான இருவகை வழக்குமாதலால், சில இலக்கணச் சொல் வடிவங்கள் முற்றாட்சி பெற்றிருப்ப தொன்றே அதன் மறுவடிவை மறுக்குஞ் சான்றாகா தென்பதைத் தெற்றென வுணர்க. |
இனி தெலுங்கில் 'செய்துகொண்டு' என்னும் எச்சத்திற்கு நேரான 'சேசுகொனி' என்னும் வடிவத்துடன், 'சேஸ்த்து' என மற்றொரு நிகழ்கால வினையெச்ச வடிவும் இருப்பது மகிழத்தக்க வொன்றாகும். |
- தமிழ்ப் பொழில், ஆடி 1956. |