பக்கம் எண் :

46தமிழியற் கட்டுரைகள்

மெனினும் ஆய்த மெனினும் தனிநிலை யெனினும் புள்ளி யெனினும் ஒற்றெனினும் ஒக்கும். என்னை?

   

'அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி
யொற்றிப் பால வைந்து மிதற்கே'
 
என்றார் மயேச்சுரர்" என்று காரிகையுரையாசிரியரான குணசாகரரும், "ஆய்தம் எனினும், அக்கேனம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும். என்னை?    

   

'அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி
யொற்றிப் பால வைந்து மிதற்கே'
 
     என்றார் அவிநயனார்" என்று யாப்பருங்கல விருத்திகாரரும் கூறுவது காண்க.
     அவிநய நூற்பாவில் அக்கேனமென்பது ஏட்டுப்பிழையா யிருத்தல் வேண்டும். பழைய திண்ணைப்பள்ளிப் பாடமுறையில் ஆய்தப்பெயர் அதன் ஒலி வடிவொட்டி அஃகன்னா என வழங்கிற்று
ஆய்தவொலி
     ஏனையிரு சார்பெழுத்துப் போன்றே, ஆய்தமும் ஒரு முதலெழுத் தின் திரிபென்பது, "இதற்கு (ஆய்தத்திற்கு) வடிவு கூறினார், ஏனையொற்றுகள் போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின்," என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும்,
  'சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்'

(பிறப்பியல், 19)

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், சார்பெழுத்து என்னும் பெயராலும், அறியப்படும். ஆயின், எவ்வெழுத்தின் திரிபெனின், ககரத்தின் திரிபாம் என்க.
     ஆய்தம் தொன்றுதொட்டு மெல்லிய ககரமாகவே ஒலிக்கப்பட்டு வருவ தாலும், ஏனச் சாரியை பெற்றக்கால் அஃகேனம் எனக் ககரத்தோ டியைந்தே வழங்குவதாலும், பண்டையேட் டரிச்சுவடிகளில் க - ஃ என்று எழுதப் பெற்றமையாலும் உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட்டிருப்பினும் ககரத்தை யடுத்திருப்பதாலும், போப்பையர் தம் தமிழிலக் கணத்தில் 'the guttural' என்றும், கால்டுவெல் தம் ஒப்பியலிலக்கணத்தில் "guttural 'h" என்றும் குறித்திருப்பதாலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் அதன் அமைப்பு முறையை விளக்குமிடத்து 'the aspirate aytam' என்று குறித்திருப்பினும், வரிபெயர்ப்பில் (transliteration) k என்னுங் குறியை ஆள்வதாலும் ஆய்தவெழுத்து ககரத்தின் திரிபேயெனத் தெற்றென வறிக.