பக்கம் எண் :

ஆய்தம்49

     "இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர்" என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆய்தச் சாரியை

   

'காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை'

(புணரியல், 32)

என்னும் எழுத்துச்சாரியை நூற்பாவில் ஆய்தவெழுத்திற்குரிய சாரியையை ஆசிரியர் கூறாவிடினும், "நேரத்தோன்றும் எனவே நேரத்தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின" என்று உரையாசிரியர் (நச்சினார்க்கினியர்) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தொல்காப்பிய நூலிற் கூறப்படாத சில இலக்கணங்கள் உரையாசிரியராற் கொள்ளப்பட்டுள்ளன அவற்றுள் ஆய்த வெழுத்துச் சாரியையும் ஒன்று. இது உரையிற் கோடல் என்னும் உத்தி பற்றியது.
ஆய்தச் சார்பு
     ஆய்தம், குறிலுக்கு முன்னும் வல்லின வுயிர்மெய்க்குப் பின்னுமாக அவ் விரண்டிற்குமிடையில் வருவதே இயல்பாம்.
  'குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே'

(மொழிமரபு, 5)

என்றார் தொல்காப்பியனார்.
  'ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய்
வலியதன் மேல்வந் தியலு மென்ப'
 
என்றார் கையனார்.
     இவ் விதிக்கு, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது இஃது, உஃது என நச்சினார்க்கினியரும்; அஃகம், வெஃகா, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும்; எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனக் குணசாகரரும்; எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என மயிலைநாதரும் எடுத்துக்காட்டினர். இவை தனிச் சொற்கள். அஃறிணை, முஃடீது, அஃகடிய என்பன தொடர்ச்சொற்கள்.
  'விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத
ரிலஃஃகு முத்தி னினம்'
 
என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றின்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க" என்று மயிலைநாதர் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.