பக்கம் எண் :

திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்65

     கொட்குதல் = வெளிப்படுதல்.
     "கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்."

(663)

     தவ்வெனல் = தாழ்தல், சுருங்குதல்.
     "கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து."

(1144)

     ஓசை வகையைக் குறிக்கும் தவ் என்னும் குறிப்புச்சொல் வேறு. ஆதலால், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி;
     "நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்ப"

 

     என்புழியும் அது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தவ்வல் என்னும் பெயர் இருதிணையிலும் இளமை குறித்தலாலும், தவ்வுதல் என்னும் வினைக்குக் குறைதல், குவிதல், தவறுதல், கெடுதல் என்னும் பொருள்களிருத்தலாலும், நெல்லை வட்டத்தில் ஒரு பாடத்தில் தாழ்வா யிருக்கும் மாணவனை அப் பாடத்தில் தவ்வலென்று கூறும் வழக்குண்மை யாலும், தவ் என்பதை இங்கு ஒரு வினைப் பண்புக் குறிப்பென்று கொள்வதே பொருத்தமாம்.

     தோல் = பழமையான புகழ், பெருமை. தொல்-தோல், தொன்மை = பழைமை.
     "தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னும் நசை."

(1043)

     "இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்"

(1494)

என்னும் தொல்காப்பிய நூற்பா ஒரு வகை வனப்பின் (காவியத்தின்) இலக்கணத்தைக் கூறுவதால், அதனொடு திருக்குறட் சொல்லைத் தொடர்பு படுத்துதல் தவறாம்.   
     முகடி = மூதேவி (சேட்டை).
     "மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்."

(617)

     அதி = மிகு, மிக.
     "மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை."

(636)

     "அதியென்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோ ரிடைச்சொல்; அது திரிந்து நுட்பமென்பதனோடு தொக்கது" என்றார் பரிமேலழகர்.