திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும் |
ஒவ்வொரு பெருநூலிலும் ஓரிரு அல்லது ஒருசில சொற்களையும் சொல்லாட்சியையும் சிறப்பாகக் காண்கின்றோம். திருக்குறளிலுள்ள சிறப்புச் சொற்களையும் சொல்லாட்சியையும் எடுத்துக்கூற எழுந்ததிக் கட்டுரை. நிகண்டு என்னும் வடசொற் பெயராற் குறிக்கப்படும் உரிச்சொற் றொகுதிகளும், உரையாசிரியன்மார் உரைகளும், பிற நூல்களிலுள்ள சொற்களை யெல்லாம் தொகுத்தும் எடுத்தும் கூறும் இயல்புடையன வாதலின், திருக் குறட் சிறப்புச் சொல் வராதனவென்று விலக்கப்பட்டவை, அவ் விருவகை யொழிந்த ஏனைய நூல்களும் பனுவல்களுமே. |
1. சிறப்புத் தனிச்சொற்கள் |
கஃசு = காற்பலம். |
"தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்." | |
(1037) |
கூழ் = செல்வம், பொருள், பொன். |
"படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு." | |
(381) |
"கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு," | |
(554) |
உணவைக் குறிக்கும் கூழ் என்னுஞ் சொல் குழை என்னும் முதனிலைத் திரிபாதலாலும், உணவு என்னுஞ் சொற்குச் செல்வம் என்னும் பொருளின்மையாலும். |
"பல்வகை யுணவும் பயிரும் பொன்னும் கொள்ப மாதே கூழென் கிளவி" | |
என்று திவாகரங் கூறுவதாலும், செல்வத்தைக் குறிக்கும் சொல் உணவுப் பெயரின் வேறு என்று கொள்ளவும் இடமுண்டு. இனி குழைவான (ductile) தாது (உலோகம்) பொன் என்றுமாம்; அல்லது இன்றியமையாத அடிப்படைச் செல்வம் உணவே எனினும் ஒக்கும். |