பக்கம் எண் :

கற்புடை மனைவியின் கண்ணியம்93

கரணமற்றதாயினும் உண்மையான காதல் வாழ்க்கையாயின் இன்றும் பழிக்கப்படாது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

     மக்கள் இம்மையில் அடையக்கூடிய இன்பங்களுள் தலைசிறந்தது பெண்ணால் வருவது.
     "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள."

(குறள், 1111)

     அதுவுங் காதலோடு, கூடியதாயின் சிற்றின்பமேனும் பேரின்பத்திற் கிணையாகக் கூறத்தக்கதாம்.
     "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு"

(குறள். 1103)

என்றார் திருவள்ளுவரும்,
  "எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வருஉ மேவற் றாகும்"

(தொல். பொருளியல், 28)

     இக் காதலின்ப வாழ்க்கையில் வறுமையில்லை, நோயில்லை, துன்பமில்லை, கவலையில்லை, ஒரு குறையுமில்லை. "இல்லதென் இல்லவள் மாண்பானால்" என்றார் திருவள்ளுவர். எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம். காதலனும் காதலியும் தானென்றும் அவளென்றும் வேற்றுமை யின்றி ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி நுகரும் இன்பம் இருவர்க்கும் பொதுவேனும், காதலனே மிகுதியாக நுகர்கின்றான்.

     இதனாலேயே,
  "விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணு முந்நீர்க்
கலங்கலைச் சென்ற வன்றுங் கலங்காய்"

(திருக்கோ. 24)

  "தில்லைச்சிவன்றாளாம் பொற்றடமலர் சூடும்"

(திருக்கோ.21)

     ஆற்றலகற்றப் பெற்று,
  "மடுக்கோ கடலின் விடுதிமி லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற்றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே"

(திருக்கோ. 63)

என எளிவந்தும் இழிவந்தும் குற்றேவல் செய்யவும்,
  "முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா வதரின் வழங்கு"

(திருக்கோ. 157)

     மடலேறியும் ஏறுதழுவலும் புலிப்பால் கறத்தலும் கோளரியைக் கொல்லுதலும் முதலிய மறச்செயல் செய்தும் மணக்கவும், கரணத்தின் பின் புதல்வனைப் பெற்றபின்பும் மனைவியைக் காலுங் கையும் பிடித்து வேண்டவும் (திருக்கோ. 390) துணிவது.