பக்கம் எண் :

கற்புடை மனைவியின் கண்ணியம்95

     ஐந்தாவது, இரப்போர்க் கீந்தும் அடியார்ப் பேணியும் விருந் தோம்பியும் பிறர்க்குத் தொண்டு செய்கின்றாள் கற்புடை யில்லாள்.

     ஆறாவது, பஞ்ச காலத்தும் மழை பொழிவிக்கவும், தேவையான விடத்து ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுடையவளா யிருக்கின்றாள் கற்புடைப்பெண். இவ் வாற்றல், இல்லறம் துறவறம் மணவாழ்க்கை ஆகிய முந்நிலைக் கற்புடைப் பெண்டிர்க்கும் பொதுவாம். இல்லறத்தி லிருந்து கொண்டே தெய்வத்தன்மை பெறவும், துறவியையும் வெகுளவும் வல்ல கற்புடையாளரின் பெருமை கட்டுரைக்குந் திறத்ததோ!
     ஏழாவது கற்புடை மனைவி தன் கணவ னிறந்ததும் உயிர் நீக்கிறாள்; இல்லாவிடின் கைம்மை நோற்கிறாள்.
     "இத்தகைக் கற்புடைப் பெண்ணை மனைவியாகப் பெறுவதே உலகில் ஒருவன் பெறத்தக்க பேறுகளில் தலைசிறந்ததாம்.
     "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்" 

(குறள். 154)

  "புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை"

(குறள். 59)

என்றார் திருவள்ளுவர்.
  "என்னொடு பொருது மென்ப அவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக!" 

(புறம். 71)

     என்பது ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினம்.
     கற்புடைப் பெண்ணை யுடைமைபற்றிப் பலவரசர் புலவராற் பாராட்டப் பெற்றனர்.
  "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ"

(புறம். 3)

  "ஓடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ"
"ஆன்றோள் கணவ",
"புரையோள் கணவ"

(பதிற்றுப்பத்து, 14, 55, 70)

     கற்புடை மனைவியை இங்ஙனம் கணவனுக்கு விழுச்செல்வமாகப் பாராட்டியதோடு நில்லாது, அவளை இறந்தபின் தெய்வமாகவும் வணங்கினர் முன்னோர்.

  "உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்"

(சிலப். )

என்றார் இளங்கோவடிகளும். குமரிமுதல் பனிமலைவரை தன் ஆணையைச் செலுத்திய செங்குட்டுவனும் பிறவரசரும் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டனர். துரோபதையம்மன் ஒச்சாண்டம்மை முதலிய