பாடம் கொண்டு தலைவிக்குரிய கூற்றுக்களை உணர்த்துவதாய் உரை எழுதுகின்றார். இளம்பூரணர் கொண்ட பாடமே பொருத்தமாய் உள்ளது. “காமத் திணையில்” என்று தொடங்கும் சூத்திரம் முதலாக, “மறைந்தவற் காண்டல்” என்ற சூத்திரம் ஈறாக (களவியல்-18-21) உள்ள நான்கு சூத்திரங்களும் தலைமகளுக்கு உரியவை. நாணமும் மடமையும் கொண்ட தலைவி, களவொழுக்கத்தில் உரையாடல் நிகழ்த்துமிடத்தை மிக மிகநுட்பமாய் அமைத்துக் காட்டுகின்றார் தொல்காப்பியர். ‘காமத் திணையில்’ (18), ‘காமஞ்செல்லா’ (19), சொல்லெதிர் மொழிதல்’ (20) என்ற மூன்று சூத்திரங்களும் தலைவி உரையாடுவதற்கு உரிய அருமைப்பாட்டினைப் பலவாறு விளக்கிக் காட்டிய பின்னர் ‘மறைந்து அவற்காண்டல்’ (21) என்னும் நீண்ட சூத்திரத்தில் அவள் உரையாடல் நிகழ்த்தும் இடங்களைச் சுட்டுகின்றார். இவையாவும் பெண் உள்ளத்தின் இயல்பறிந்து அமைக்கப்பட்டவையாகும். ‘இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும்’ என்று தொடங்கும் சூத்திரம் தலைமகனுக்கு உரியது என்று இளம்பூரணர் கொண்டது பொருத்தமே. இச்சூத்திரத்தை நச்சினார்க்கினியர் கொண்டதுபோல, தலைவிக்குரியதாகக் கொண்டால், தலைவி களொழுக்கத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இன்றி, உரை நிகழ்த்திய நாகரிகக் குறைபாட்டிற்கு ஆளாவாள். களவொழுக்கத்தில் தலைவன் உரை நிகழ்த்தும் இடத்தை உணர்த்தும் சூத்திரம் தொல்காப்பியர் செய்யவில்லை என்ற குறைபாடும் ஏற்படும். எனவே ‘கிழவோன்’ என்று இளம்பூரணர் கொண்ட பாடமே சிறந்ததாகும். மேலும், ‘சுடர்த்தொடீஇ கேளாய்’, என்னும் கலிப் பாடல் (கலி-51) உரை விளக்கத்தின் இறுதியில் நச்சினார்க்கினியர் எழுதும் விளக்கம், அவர்க்குக் “கிழவோன்மேன” என்ற பாடம் பொருத்தமானது என்று கருத்து இருப்பதைப் புலப்படுத்துகின்றது. களவியலில், (12) பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். நச்சினார்க்கினியர். பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப என்று பாடங்கொண்டார். குழப்பத்திற்கும் முரண்பாடான கருத்திற்கும் இடங்கொடுக்கும் சூத்திரங்களில் இதுவும் ஒன்று. இளம்பூரணர் பழைய உரையாசிரியர்; அவர் கொண்ட பாடம் |