பக்கம் எண் :

உரையாசிரியர்கள்192

    கவர்பொருள் மாக்கள் மயக்கினுக்கு இரங்கிப்
    பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
    தோய மடுத்தோர் தொல்காப்பியன் உரை
    முத்திற ஓத்தினுக்கு ஒத்தசீர்க் காண்டிகை
    சொல்நிலை மேற்கோள் தொகுபொருள் துணிவுடன்
    இயல்நூற் பாமுடிபு இணைத்து அடிகாட்டி,
    தலைகடை கூட்டித் தந்தனன்; பண்டே
    கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்;
    தன்னறிவு அளவையில் நல்லுரை தேவர்
    பன்மணிக் குறட்பால் மதிப்பிடப் பொறித்தோன்:
    குணகடல் செல்லூர் மணக்குடி புரியான்
    தண்முலை முகைஎன வெண்ணூல் சூடி
    அந்தணன் அறவோன் அருமறை உணர்ந்த
    இளம்போதி பயந்த புனிதன்
    இளம்பூரணன் உரை இனிது வாழ்க ஈங்கென்

    இப் பாயிரத்திலிருந்து இளம்பூரணர் வரலாற்றினைப் பின்வருமாறு
தொகுத்துக் கூறலாம்; இளம்பூரணர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை
யோரமாய் உள்ள செல்லூரில் பிறந்தவர்; மணக்குடி புரியான் என்பது
அவரது குடிப்பெயர்; அவர் தந்தையார் அந்தணர், அறவோர், அருமறை
உணர்ந்தவர், இளம்போதி என்பவர். இளம் பூரணர் தொல்காப்பியம்,
கொங்குவேள் மாக்கதை, திருக்குறள் ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை
இயற்றியவர்.

     மேலே காட்டப்பட்ட செய்யுள், பிற்காலத்தில் ஒருவர் (சொர்ணம்
பிள்ளை)* எழுதிவிட்ட போலிச் செய்யுள் என்பதைத் தமிழறிஞர்
மு. அருணாசலம் (12-ஆம் நூற். இலக்கிய வரலாறு) தெளிவுப்படுத்தியுள்ளார்.

     இந்தச் செய்யுள் கூறும் செய்திகள் பொய்யானவை என்பதைப்
பின்வரும் சான்றுகளால் உணரலாம்:

    1.    தொல்காப்பியம் இளம்பூரணர் உரையைத் தேடிப் பதிப்பித்தவர்
எவருக்கும் இந்தச் செய்யுள் கிடைக்கவில்லை. வேறு ஏட்டுச் சுவடிகளிலும்
இது இடம் பெறவில்லை.

    2.    திருக்குறள் உரையாசிரியர்களைக் கூறும் பழைய வெண்பா
இளம்பூரணரைக் குறிப்பிடவில்லை.


 

 * இவர் இன்னிலை என்று பெயரால் ஒரு போலி நூலையும் செங்கோன்
தரைச்செவு என்ற பொய்ந்நூலையும் இயற்றி ஆராய்ச்சி உலகில் குழப்பம்
உண்டாக்கியவர்.