முதலில் உரை எழுதிய நூல் பல நூல்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், முதன் முதலில் எந்த நூலுக்கு உரை இயற்றினார் என்று அறியும் ஆர்வம், கற்போர் உள்ளத்தில் எழுவது இயற்கையே. தொல்காப்பியச் செய்யுள் இயலில் (210) ‘அகன்று பொருள் கிடப்பினும்’ என்ற சூத்திரத்தின் உரையில், “இனிப் பல செய்யுட்கள் வருமாறு சிந்தாமணியுள் யாம் கூறிய உரையான் உணர்க” என்றும் கூறுகின்றார். இதைக் கொண்டு நச்சினாக்கினியர், தொல்காப்பியத்திற்கு உரை எழுதுமுன்னரே, சீவக சிந்தாமணிக்கு உரை எழுதி முடித்துவிட்டார் என்பதை அறியலாம். ஆனால் இக் கருத்திற்கு மாறாக வேறு சில சான்றுகள் சிந்தாமணி உரையுள் உள்ளன. சிந்தாமணியில் உள்ள 72, 892, 1913, 2690 ஆகிய பாடல்களில் நச்சினார்க்கினியர், தாம் தொல்காப்பியத்திற்குச் சிந்தாமணிக்கு உரை இயற்றுமுன்னரே உரை இயற்றி இருப்பதாயும், அவ்வுரையில் தம் கருத்துகளை விளக்கி இருப்பதாயும், அங்கே காணுமாறும் கூறுகின்றார். இவர், முதலில் உரை எழுதத் தொடங்கிய நூல் சிந்தாமணியா, தொல்காப்பியமா என்று அறிய இயலவில்லை. இவர் கூற்றே மாறுபாடாய் உள்ளது. இவற்றை எல்லாம் ஆராய்ந்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் ஒரு முடிவுக்கு வருகின்றார். சீவக சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் முதன் முதலில் ஓர் உரை இயற்றிச் சைன சமயத்தவரிடம் காட்டினார் என்றும்; அவர்கள் அதனைப் புறக்கணிக்கவே பிறிதோர் உரை இயற்றி, அவர்களின் பாராட்டுதலைப் பெற்றார் என்றும் செவிவழிச் செய்தியாக ஒரு வரலாறு உண்டு. இதனை ஆதாரமாகக் கொண்டு, டாக்டர் உ.வே.சா. முரண்பாட்டைத் தீர்க்க முயலுகின்றார். “இந்த இரண்டு பகுதியுள் முற்பகுதி இவர் தொல்காப்பியத்திற்கு உரை இயற்றுமுன் சிந்தாமணிக்கு முதல் முறை உரை இயற்றியதையும், இரண்டாவது பகுதி இவர் அந்நூலுக்கு உரை இயற்றியபின் அதற்கு இரண்டாம் முறை உரை இயற்றியதையும் ஒருவகையாகப் புலப்படுத்தி மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தி நிற்றல் காண்க” என்று தெளிவுபடுத்துகின்றார். இவற்றால், முதன்முதலில் உரை இயற்ற எடுத்துக் கொண்ட நூல் சீவக சிந்தாமணி என்பதும், அவ்வுரை சைன சமயத்தவரால் புறக்கணிக்கப்படவே தொல்காப்பியத்திற்கு உரை இயற்றியபின், |