குறள்களின் இடமாற்றம் காலிங்கரது உரையில், காமத்துப்பாலில் உள்ள சில குறள்கள் அதிகாரம் விட்டு அதிகாரம் மாறியுள்ளன. தனிப்படர் மிகுதி என்ற அதிகாரத்தில் உள்ள ‘வீழ்வாரின் இன்சொல்’ (1198) என்ற குறள், நினைந்தவர் புலம்பல் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறளாக உள்ளது. நினைத்தவர் புலம்பல் என்ற அதிகாரத்தில் உள்ள ‘விடாஅது சென்றாரை’ (1210) என்ற குறள், அவர்வயின் விதும்பல் என்ற அதிகாரத்தில் ஆறாவது குறளாக உள்ளது. வேறுபாடமும் கருத்துச்சிறப்பும் காலிங்கர் சில குறள்களுக்குக் கொள்ளும் வேறு பாடங்களால், பொருள் சிறக்கின்றது. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (78) என்ற குறளில் ‘வன்பால்’ என்பதற்குக் காலிங்கர் ‘வன்பார்’ என்று பாடம் கொண்டு, ‘கல்செறிந்து வற்கென்ற தரை’ என்று பொருள் கூறுகின்றார். நயன் சாரா நன்மையின் நீக்கும் (194) என்ற குறளில், “நன்மையும் நீங்கும் என்று வேறு பாடம் கொண்டு, நயம் சேராமல் திருமாதும் பொய்க்கும்” என்று பொருள் கொள்ளுகின்றார். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் (363) என்ற குறளில் ஆண்டும் என்பதற்கு யாண்டும் என்று வேறு பாடம் கொண்டு, ‘எவ்விடத்தும்’ என்று பொருள் உரைக்கின்றார். புதுப்பொருளும் விளக்கமும் காலிங்கர் சில இடங்களில் புதுமையாகப் பொருளும் விளக்கமும் கூறுகின்றார். அவற்றைக் காண்போம். உயிரெச்சம் (510) - முத்தி கழிப்பெருங்காரிகை (517) - பெரிய நன்மை. ஒருவந்தம் (593) - பெருஞ்செல்வம். எச்சம் (1004) - குலம் உருபு குணம் ஒழுக்கம் புதல்வர் புகழ் பொருள் பூமி என்னும் எச்சம். பேடி கைவாள் (614) - உறையகத்து இருந்த வாள். |