சிலப்பதிகார வெண்பாக்கள் சிலவற்றிற்கு அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் இருப்பதால் அவை அவ்வுரையாசிரியர்களுக்கு முன்னரே தோன்றியவை என்பது உறுதி. சில வெண்பாக்களுக்கு உரை இல்லாமையால் அவை பின்னர்த் தோன்றியவை என்னலாம். அவற்றை இங்கே விரிவாகக் காண்போம். கொலைக்களக் காதையின் கீழ், நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை என்ற வெண்பா உள்ளது. இதற்கு அரும்பதவுரையாசிரியர், ‘நண்ணும் கண்ணகி தன் கேள்வன் காரணமாக வளைந்தது. இது பண்டை வினை. இருவினையும் நண்ணும் ஆதலால் உலகத்தீர், அறஞ்செய்மின் என்று இளங்கோ அடிகள் அருளிச் செய்தது’ என்றும்; அடியார்க்கு நல்லார் ‘உலகத்தீர்! நல்வினையே செய்யுமின்கள் என்று அடிகள் கூறினார் என்க’ என்றும் கூறியுள்ளார். இரு பெரும் உரையாசிரியர்களும் மேலே காட்டிய வெண்பாவை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்றே கூறியுள்ளனர். மதுரைக் காண்டத்தின் இறுதியாகிய கட்டுரைக் காதையின் கீழே, தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழும்தகைமை திண்ணிதால்-தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து என்ற வெண்பா உள்ளது. இவ்வெண்பாவினை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்றே அடியார்க்கு நல்லார் கருதுகின்றார். ஊர்சூழ்வரியில் (24), பெருந்தெய்வம்-தெய்வத்திலும் பெரியது; கற்புடைத் தெய்வம். என்னை? தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழுவாளை, தெய்வந் தொழும் தகைமை திண்ணமால் எனவும் கூறினமையின்” என்று விளக்கம் தரும்போது மேலே கண்ட வெண்பாவைக் காட்டுகின்றார். அந்திமாலைச் சிறப்புச்செய் காதையின் இறுதியில் ‘கூடினார் பால் நிழலாய்’ என்ற வெண்பாவும், கடலாடுகாதைக்கு அடியார்க்கு நல்லார் உரைக்குப்பின் “வேலை மடற்றாழை” என்ற வெண்பாவும் உள்ளன. இவ்விரண்டு வெண்பாக்களுக்கும் |