பக்கம் எண் :

667ஆய்வு

தனிப் பாடல்களுக்கு உரை), சிலப்பதிகாரம் (அடைக்கலக் காதை,
கடலாடுகாதை), திருக்குறள் பரிமேலழகர் விளக்கவுரை (சிறந்த ஆராய்ச்சி
முன்னுரையுடன்), நாலடியார், நன்னூல் (காண்டிகையுரை), சடகோபர் அந்தாதி,
திருப்பாவை, சரசுவதியந்தாதி, திருவேங்கடக்கலம்பகம், அழகர் கலம்பகம்,
மதுரைக் கலம்பகம், முதுமொழிக் காஞ்சி, அஷ்டப் பிரபந்தம், நாலாயிர
திவ்வியப் பிரபந்தம்.

     இவரது உரைத்திறனை அறிய வில்லிபாரத உரையிலிருந்து ஒரு
பகுதியைக் காண்போம்:

    விராட பருவத்தில் நிரை மீட்சிச் சருக்கத்தில் (56),

    முந்த ஆன்தொறு மீட்டலும் முற்கவர் பொதுவர்
    வெந்த நெய்யென அரவம் அடங்கினர்; மிகவும்
    வெந்த நெய்யினில் பால்துளி உகுத்தென ஆர்த்தார்
    வந்த மச்சர்கோ மகனோடும் வந்த கோபாலர்

என்ற பாடல் அருச்சுனன் நிரை மீட்டபோது இடையர்கள் மனம்
மகிழ்ந்ததைக் குறிப்பிடுகின்றது.

     இப் பாடலுக்குக் கோபால கிருஷ்ணமாசாரியார் பொழிப்புரை தந்து,
அருஞ்சொற் பொருள் கூறி விளக்கம் எழுதுகின்றார். அவற்றைக் காண்போம்:

சொற்பொருள் கூறல்

    முந்த - முன்னே; ஆன்தொறு-பசுக்கூட்டத்தை; முன் கவர் பொதுவர் -
முன்பு பசுக்களைக் கவர்ந்துபோன இடையர்.

விளக்கம்

    “வெந்த நெய்-காய்ச்சுகையில் வெண்ணெயின் நீர்ப் பசையற்ற நெய்;
கொதிப்புத் தணியாத நெய். தொழில் பற்றி வந்த உவமையணி.”

     “பால் துளி உகுத்தல், நீர்ப்பசையற்றதையும் அருமையையும்
உணர்தற்கு என்க. வெந்த நெய்யென அரவம் அடங்கினர் எனவும், அந்த
நெய்யினில் பால் துளி உகுத்தது என ஆர்த்தார் எனவும் கூறியன -
இடத்துக்கும் சாதிக்கும் ஏற்ற உவமைகள். இங்ஙனம் கூறுவது மகா கவிகளது
இயல்பு.”

ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1884-1944)

     ந. மு. வேங்கடசாமி நாட்டார் தலைசிறந்த தமிழ் நூல்களுக்கு உரை
இயற்றித் தம் பெயரை நிலைநாட்டிச் சென்றுள்ளார். இவருடைய தமிழ்நடை,
ஆற்றல் நிறைந்தது; எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவாக விளக்குவது.