பக்கம் எண் :

உரையாசிரியர்கள்690

என்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்.
ஓர் அடியிலும் புலப்படும்” என்பர்.1

மேற்கோள் காட்டும் முறை

    உரையாசிரியர்கள், மேற்கோள் காட்டும் முறை பல வகையாய் உள்ளன.
இளம்பூரணர் பல பெரிய பாடல்களை முழுமையாகத் தருவார். அவற்றில்
இலக்கணத்திற்குப் பொருத்தமான பகுதியை நாமே தேடிக் காணவேண்டும்.
நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோர் மேற்கோள் பாடல்களைத்
தேவையான அளவு துண்டித்து உரிய இடங்களில் காட்டிச் செல்வர்;
முதல் அடி, முதற்சொல் காட்டி ‘என்ற பாட்டினுள் காண்க’ என்றும் கூறுவர்;
‘இதற்கு, முன்னர் உதாரணம் கூறினோம்; பின்னார்க் காட்டுதும்’ என்றும்
எழுதுவர். நச்சினார்க்கினியர், தாம் மேற்கோள் காட்டும் பாடல்கள் இன்ன
நூலைச் சார்ந்தவை என்றோ, இன்ன ஆசிரியர் பாடியவை என்றோ
பெரும்பாலும் சுட்டுவதில்லை. ஆதலின் அவர் உரையில் இடம்
விளங்கா மேற்கோள்கள் மிகுதியாக உள்ளன. அடியார்க்கு நல்லார் தாம்
மேற்கோளாகக் காட்டும் பாடல் எந்த நூலைச் சேர்ந்தது என்று சுட்டியே
செல்வார். பாடலின் ஆசிரியரையும் மறவாமல் கூறுவார். இவ்வாறு
ஒவ்வொருவரிடமும் ஒவ்வோர் இயல்பு காணப்படுகின்றது.

மேற்கோள் காட்டாத நூல்கள்

    உரையாசிரியர்கள் தம் காலத்தில் தோன்றிய புதிய நூல்களிலிருந்தும்,
சங்க காலத்திற்குப்பின் தோன்றிய இலங்கியங்கனிலிருந்தும் மேற்கோள்
தருவதில்லை. இதைப்பற்றி அறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,
“நாயன்மார்கள், ஆழ்வார்கள் எழுதிய பாடல்கள் பொதுமக்கள் உள்ளத்தைக்
கவர்ந்தாலும் பழைய இக்கண உரையாசிரியர்கள் பெரும்பாலோர் இவற்றைப்
பற்றியதோர் இருட்டடைப்பினை விளைத்திருக்கக் காண்கிறோம். கம்பனும்
இந்த இருட்டடைப்புக்கு உட்பட்டே உள்ளான். திருப்புகழையோ,
தாயுமானவரையோ பின்வந்த உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டக் காணோம்!
சிலப்பதிகாரத்தைக் கோவலன் கதை எனவும், இராமயணத்தை இராமன் கதை
எனவும் எள்ளி நகையாடும் மனப்பான்மையும் அங்குக் காண்கிறோம்”
என்று கூறுகின்றார்.

     இவ்வாறு புறக்கணிக்கக் காரணம் என்ன?


 1. என் சரிதம் (1950) பக்கம் 338.

 2. கலைக்களஞ்சியம் - 5, பக்கம் 492.