பக்கம் எண் :

யான் பெற்ற நல்லுரை 241

செட்டியார் இவ்வளவு சகஜமாகப் பிள்ளையவர்களிடம் பேசுவாரென்று
நான் நினைக்கவில்லை. அவர் தம் அன்பினாலும் பணிவினாலும்
மாணாக்கராகப் புலப்படுத்திக் கொண்டார். பேச்சிலோ மனமொத்துப் பழகும்
நண்பரைப் போலவே பேசினார். தம் மனத்திலுள்ள அபிப்பிராயங்களை ஒளிவு
மறைவின்றி மரியாதைக்குப் பயந்து மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு
பொருமாமல் வெளியிட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தம்
அபிப்பிராயங்களை அவர் சொல்லுவதை முதல் முதலாகக் கேட்பவர்கள்,
‘அவர் மரியாதை தெரியாதவர், முரடர், அகங்காரி’ என்றே எண்ணக்கூடும்.
அவருடைய அந்தரங்க இயல்பை அறிந்து கொண்டவர்களுக்கு அவர்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவரல்லரென்பதும் தமக்குத்
தோற்றிய அபிப்பிராயங்களைத் தோற்றியபடியே தெளிவான வார்த்தைகளிலே
சொல்லி விடுபவரென்பதும் தெரியவரும்.

நல்லுரை

செட்டியார் எழுந்தார். நாங்களும் எழுந்தோம். “ஐயாவிடம் நீர்
நன்றாகப் பாடம் கேட்டுக் கொள்ளும். இவர்களுடன் இருப்பதையே ஒரு
கௌரவமாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாக இருந்துவிடவேண்டாம்.
கொஞ்சகாலம் இருந்துவிட்டு எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி
ஓடிப்போய்விடவும்கூடாது. இம்மாதிரி பாடம் சொல்பவர்கள் வேறு எங்கும்
பார்க்க முடியாது உம்முடைய நன்மையை உத்தேசித்துச் சொல்லுகிறேன்”
என்று செட்டியார் என்னைப் பார்த்துச் சொன்னார். அவ்வார்த்தைகள்
எனக்குச் சிறந்த ‘நல்லுரை’களாக இருந்தன. மற்றவர்களெல்லாம்
பிள்ளையவர்கள் பெருமையையும் என் பாக்கியத்தையும் பாராட்டிப்
பேசுவதையே கேட்டிருந்தேன். செட்டியாரோ நான் இன்னவாறு
இருக்கவேண்டுமென்பதைச் சொன்னார். அவர் என்னைப் பாராட்டவில்லை;
அதனால் என்ன? என் வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும்
வழியைச் சொன்னார். அவர் கூறிய அனுபவ சாரமான வார்த்தைகள் எனக்கு
அமிர்தம்போல இருந்தன.

செட்டியாரும் அவருடன் வந்தவர்களும் விடைபெற்றுச் சென்றனர்.
நாங்கள் வண்டியில் ஏறிவந்து பட்டீச்சுரத்தை அடைந்தோம்.