Untitled Document என்னை முற்றும் குருடனாக்கி விட்டது. புதிய சமையற்காரர் காட்டாதிருந்தால், உண்மையை நான் கண்டுகொண்டிருக்கவே மாட்டேன். இச்சம்பவத்திற்குப் பிறகு நான் பற்றற்ற வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். இச்சம்பவத்தை நான் அறியாமல் இருந்திருந்தால், அந்தச் சகாவின் தொடர்பினால் இந்த பற்றற்ற வாழ்க்கையை நான் நடத்த முடியாமலும் போயிருக்கக் கூடும். என்னை இருட்டிலேயே வைத்திருந்து, நான் தவறான வழியில் சென்றுவிடும்படி செய்துவிடும் சக்தி, அவருக்கு உண்டு.
ஆனால், முன்பு போலவே கடவுள் என்னைக் காத்தருள வந்தார். என் நோக்கங்கள் தூய்மையானவை. ஆகையால், நான் தவறுகள் செய்திருந்தும், காப்பாற்றப்பட்டேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம், வருங்காலத்திற்கான ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாயிற்று.
அந்தச் சமையற்காரர், கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் போன்றே ஆனார். அவருக்குச் சமையல் வேலை தெரியாது. ஆகையால், சமையற்காரராக அவர் என்னிடத்தில் இருந்திருக்க முடியாது. ஆனால், வேறு யாரும் என் கண்களைத் திறந்திருக்க முடியாது. என் வீட்டிற்குள் அந்த விபசாரி அழைத்துக் கொண்டு வரப்பட்டது, அது முதல் தடவை அன்று என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். அவள், முன்னால் அடிக்கடி வந்திருக்கிறாள். ஆனால், இந்தச் சமையற்காரருக்கு இருந்த தைரியம் வேறு யாருக்கும் இல்லை. ஏனெனில், கண்ணை மூடிக்கொண்டு அந்தச் சகாவை நான் எவ்வாறு நம்பி வருகிறேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். இந்தச் சேவையைச் செய்வதற்கென்றே அச் சமையற்காரர் அனுப்பப்பட்டது போல் இருந்தது. ஏனெனில், அக் கணத்திலேயே தாம் போய்விடப் போவதாக என்னிடம் அவர் அனுமதி கேட்டார்.
“நான் உங்கள் வீட்டில் இருக்க முடியாது. உங்களைத் சுலபமாகப் பிறர் ஏமாற்றி விடுகிறார்கள். இது எனக்கு ஏற்ற இடம் அல்ல” என்று சமையற்காரர் கூறினார். அவர் போக அனுமதியும் கொடுத்துவிட்டேன்.
குமாஸ்தாவைக் குறித்து சந்தேகம் ஏற்படும்படி செய்ததும் இந்த என் சகாவைத் தவிர வேறு யாரும் அல்ல என்பதையும் இப்பொழுது கண்டுகொண்டேன். குமாஸ்தாவுக்கு நான் செய்துவிட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட எவ்வளவோ கஷ்டப்பட்டு முயன்றேன். அவருக்கு முற்றும் திருப்தி ஏற்படும்படி செய்ய முடியாது போனது எனக்கு நிரந்தரமான துக்கமாக இருந்து வருகிறது. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுப்போட்டாலும், பிளவு பிளவுதான். | |
|
|