பக்கம் எண் :

28சத்திய சோதனை

கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது   வரையில் நான் மற்றும்
பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக     வேண்டியிருந்தது. நாம்
காலவாரியாகப் போய்க்     கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக்
குறித்துப் பின்னால் கூறுகிறேன்.

     என்றாலும், ஒரு விசயம் அதே சமயத்தில்    நடந்ததாகையால்
அதைப்பற்றி            இப்பொழுது நான் கூறவே வேண்டும். என்
மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய    பேதங்களுக்கு ஒரு
காரணம், இந்த      நண்பரோடு நான்    சேர்ந்திருந்ததே என்பதில்
சந்தேகமில்லை. மனைவியிடம்       அளவற்ற அன்பும் சந்தேகமும்
கொண்ட கணவன் நான். என்      மனைவிமீது நான் கொண்டிருந்த சந்தேகத்தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார்.    அவருடைய
கூற்று உண்மைதானா என்று நான்     சந்தேகிக்கவே இல்லை. அவர்
கூறியவைகளைக்          கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி
துன்புறுத்தி        வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக
என்னை நான் ஒருபோதும்   மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக
சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின்
அவதாரம் என்று   போற்றுகிறேன். ஒரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால்    அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல,     மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே
அவன் வெளியேறி விடுவான்.   நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி,     தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால், அவள் மீது
கணவன்  சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள்
எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப்
பெற முடியாது. சட்டத்தில்     அவளுக்குப் பரிகாரம் இல்லை. என்
மனைவியையும் நான் இத்தகைய       நிர்க்கதியான நிலைமைக்குக்
கொண்டு    போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை
மன்னித்துவிடவும் முடியாது.

     அகிம்சா தருமத்தை, அதன் எல்லா      அம்சங்களிலும் நான்
உணர்ந்த பின்னரே,     சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது.
அப்பொழுதுதான்       பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன்.
அப்பொழுதுதான்     மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும்,
தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல      என்பதையும்,
அவனுடைய        சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு
வகிப்பவள் என்பதையும்,   கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச்      சுதந்திரம் உண்டு என்பதையும்  தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய   அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும்