Untitled Document ஆனால், நீங்கள் செய்யக் கூடியது ஒன்று இருக்கிறது.” “அது என்ன?” என்று அவர் கேட்டார். “டர்பனிலிருக்கும் ‘இந்தியன் ஒப்பீனியன்’ அச்சக நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளுவீர்களா? ஸ்ரீ மதன்ஜித்துக்கு இங்கே வேலை இருக்கிறது. டர்பனில் யாராவது இருக்க வேண்டியிருக்கிறது. உங்களால் அங்கே இருக்கமுடியுமானால் எனக்கு அந்தக் கவலை நீங்கியதாக எண்ணுவேன்” என்றேன். “எனக்கும் ஓர் அச்சகம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேகமாக நான் அங்கே போவது சாத்தியமாகலாம். ஆனால், என் முடிவான பதிலை இன்று மாலை கூறலாமல்லவா? மாலையில் நாம் உலாவப்போகும்போது அதைக் குறித்துப் பேசுவோம்” என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். மாலையில் பேசினோம். போவதற்குச் சம்மதித்தார். சம்பளத்தைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. ஏனெனில், பணம் அவர் நோக்கமல்ல. என்றாலும், மாதம் 10 பவுன் சம்பளமும், ஏதாவது லாபம் வந்தால் அதில் ஒரு பங்கும் என்ற முடிவுக்கு வந்தோம். தமக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்கும் வேலையை என்னிடம் விட்டுவிட்டு அன்று மாலை மெயில் ரெயிலிலேயே ஸ்ரீ வெஸ்ட், டர்பனுக்குப் புறப்பட்டார். அன்று முதல், தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலேறிய வரையில், அவர் என்னுடைய இன்ப துன்பங்களில் பங்காளியாக இருந்து வந்தார். லௌத்தில் (லின்கன்ஷயர்) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வெஸ்ட். சாதாரணப் பள்ளிப் படிப்புத்தான் அவர்பெற்றிருந்த கல்வி. ஆனால், அனுபவம் என்ற பள்ளியிலும், திடமான சுயமுயற்சியினாலும் அவர் எவ்வளவோ அறிந்து கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் தூய்மையும், நிதானமும், காருண்யமும், கடவுள் பக்தியுமுள்ள ஆங்கிலேயராக இருக்கக் கண்டேன். இனி வரும் அத்தியாயங்களில் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி அதிகமாகக் கவனிப்போம். நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளவேண்டிய வேலை எனக்கும் என் சகஊழியர்களுக்கும் இல்லாதுபோயிற்று என்றாலும் கறுப்புப் பிளேக்கினால் ஏற்பட்ட பல காரியங்களை நாங்கள் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தது. இந்தியர் குடியிருப்பு ஒதுக்கல் பகுதி சம்பந்தமாக நகரசபை சிரத்தையின்றி இருந்துவிட்டதைக் குறித்து முன்னால் கூறியிருக்கிறேன். ஆனால், வெள்ளைக்காரரின் சுகாதாரத்தைப் | |
|
|