Untitled Document போராட்டத்தில்தான் வல்லபாய், தம்மைத் தாமே கண்டு கொண்டார் என்பது, அதனளவில் சாமான்யமான பலன் அன்று. அதன் பலன் எவ்வளவு பிரமாதமானது என்பதைச் சென்ற ஆண்டு நடந்த வெள்ளகஷ்ட நிவாரண வேலையில் இருந்தும், இந்த ஆண்டு நடந்த பார்டோலி சத்தியாக் கிரகத்திலிருந்தும் நாம் அறிய முடியும். குஜராத்தில் பொதுஜன சேவை வாழ்க்கை புதிய சக்தியையும், ஊக்கத்தையும் பெற்றது. பட்டாதாரான விவசாயி, தம்முடைய பலத்தை மறக்க முடியாத வகையில் உணரலானார். மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது. இந்தப் பாடம், அழிய முடியாத வகையில் பொதுமக்களின் மனத்தில் பதிந்துவிட்டது. கேடாப் போராட்டத்தின் மூலம் சத்தியாக்கிரகம் குஜராத்தின் மண்ணில் ஆழ வேர் ஊன்றிவிட்டது.
ஆகையால், சத்தியாக்கிரகம் முடிவடைந்ததைக் குறித்து நான் உற்சாகமடைவதற்கு எதுவும் இல்லையென்றாலும், கேடா விவசாயிகள் குதூகலமடைந்தார்கள். ஏனெனில், தங்கள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனை அடைந்துவிட்டதாக அவர்கள் அறிந்ததோடு தங்களுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு உண்மையான, தோல்வியே இல்லாத ஒரு முறையையும் அவர்கள் கண்டுகொண்டனர். இதை அவர்கள் அறிந்திருந்தது ஒன்றே, அவர்கள் அடைந்த குதூகலம் நியாயமானது என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது.
என்றாலும், சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைக் கேடா விவசாயிகள் முற்றும் அறிந்துகொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைக்கொண்டே இதை அவர்கள் கண்டுகொண்டனர். அதைக் குறித்துப் பின்வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்.
ஐரோப்பாவில் நாசகரமான யுத்தம் நடந்துகொண்டு வந்த போதுதான் கேடாப் போராட்டம் ஆரம்பமாயிற்று. அப்போராட்டம் முடிந்த பிறகு, யுத்தத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை உண்டாயிற்று. வைசிராய் டில்லியில் ஒரு யுத்த மகாநாட்டைக் கூட்டி, அதற்குப் பல தலைவர்களையும் அழைத்திருந்தார். வைசிராய் லார்டு செம்ஸ்போர்டுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன்.
அந்த அழைப்பிற்கு இணங்கி நான் டில்லிக்குச் சென்றேன். ஆனால், அம்மகாநாட்டில் நான் கலந்து கொள்ளுவது சம்பந்தமாக எனக்குச் சில ஆட்சேபங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது, | |
|
|