பக்கம் எண் :

572சத்திய சோதனை

Untitled Document
அவர்களின் நடுவே நான் அந்நியனாக உணரவே இல்லை.

     ஹன்டர் கமிட்டியின் முன்பு       விசாரணைக்குச் சாட்சியம்
அளிப்பதில்லை என்று  நாங்கள் ஏகமனதாக முடிவு செய்த விஷயம்,
இப்பொழுது சரித்திரப் பிரசித்தமானது.           இவ்விதம் முடிவு
செய்ததற்கான காரணங்கள், அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஆகையால்,     அவற்றை இங்கே   திரும்பக் கூறிக் கொண்டிருக்க
வேண்டியதில்லை.         ஒன்றை மாத்திரம் சொன்னாலே போதும்.
இவ்வளவு காலமான பிறகும்         அந்த நிகழ்ச்சிகளைக் குறித்து
எண்ணிப் பார்க்கும்போது, அக் கமிட்டியைப்    பகிஷ்கரிப்பதென்று
நாங்கள் செய்த முடிவு முற்றும் சரியானதும்   பொருத்தமானதுமாகும்
என்றே இப் பொழுதும் நான் எண்ணுகிறேன்.

     ஹன்டர் கமிட்டியைப்    பகிஷ்கரிப்பதென்று நாங்கள் முடிவு
செய்து விட்டதன் விளைவாகக்   காங்கிரஸின் சார்பாக அதேபோல
விசாரணையை நடத்த   உத்தியோகஸ்தரல்லாதவர்களைக் கொண்ட
ஒரு கமிட்டியை நியமிப்பது       என்று தீர்மானித்தோம். பண்டித
மோதிலால் நேரு,     காலஞ்சென்ற       தேசபந்து ஸி.ஆர்.தாஸ்,
ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, ஸ்ரீ எம்.ஆர். ஜெயகர்  ஆகியோரும் நானும்
அக்கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம்.  உண்மையில்
எங்களை நியமித்தவர்    பண்டித மாளவியாஜியே. விசாரிப்பதற்காக
நாங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். கமிட்டியின்
வேலைகளை ஒழுங்குபடுத்தும்       பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.
அதோடு     அதிகப்படியான இடங்களில் விசாரிக்கும் பாக்கியமும்
எனக்குக் கிடைத்தது. இதனால்,            பாஞ்சால மக்களையும்
பாஞ்சாலத்தின்         கிராமங்களையும் நெருங்கிப் பழகி அறிந்து
கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

     இந்த விசாரணையை நான் நடத்தி வந்தபோது  பாஞ்சாலத்தின்
பெண்களிடமும் நான் நெருங்கிப் பழகினேன். எவ்வளவோ  காலமாக
ஒருவருக்கொருவர் நன்றாகத்  தெரிந்தவர்களைப்  போன்றே நாங்கள்
பழகினோம். நான் சென்ற இடங்களிலெல்லாம்  பெண்கள் ஏராளமாக
வந்து கூடினார்கள். அவர்கள்,           தங்கள் கையினால் நூற்ற
நூல்களையும்      என் முன்பு கொண்டு வந்து குவித்தார்கள். கதர்
வேலைக்குப் பாஞ்சாலத்தில் அதிக இடமுண்டு   என்ற உண்மையை,
நான் செய்து வந்த விசாரணை         வேலையின் மூலம் தெரிந்து
கொண்டேன்.

     மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த   அட்டூழியங்களைக் குறித்து
என் விசாரணையை மேலும் மேலும்       நான் நடத்திக் கொண்டு
போகப் போக, அரசாங்கத்தின்    கொடுமைகளைப் பற்றியும், அதன்
அதிகாரிகளின் எதேச்சாதிகார         அக்கிரமங்களைக் குறித்தும்,
ஏராளமான விவரங்களை அறியலானேன். இவற்றையெல்லாம்