Untitled Document ஈடுபட்டிருந்தவர்களே அன்றி எங்களில் யாரும் கைத்தொழில் தெரிந்தவர்கள் அல்ல. தறிகளில் நாங்கள் வேலை செய்வதற்கு முன்னால் நெசவு வேலையை எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால், திகைத்துப் போய் எடுத்த காரியத்தை இலகுவில் விட்டு விடுகிறவரல்ல மகன்லால் காந்தி. இயந்திர விஷயங்களில் இயற்கையாகவே அவருக்கு ஆற்றல் இருந்ததால், சீக்கிரத்திலேயே அக்கலையில் அவர் முற்றும் தேர்ச்சி பெற்று விட்டார். ஒருவர் பின் ஒருவராகக் கைத்தறியில் நெய்பவர்கள் பலரை ஆசிரமத்தில் புதிதாகப் பழக்கி விட்டோம்.
எங்கள் கையால் நாங்களே நெய்துகொண்ட துணிகளைத் தான் நாங்கள் உடுத்த வேண்டும் என்பதே நாங்கள் கொண்ட லட்சியம். மில் துணியைப் போட்டுக் கொள்ளுவதை உடனே விட்டுவிட்டோம். இந்தியாவில் தயாரான நூலைக் கொண்டு கையினால் நெய்த துணிகளை மாத்திரமே அணிவது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தீர்மானித்துக் கொண்டோம். இப்பழக்கத்தை மேற்கொண்டதால் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்கள் ஏற்பட்டன. நெசவாளர்களின் வாழ்க்கை நிலையையும், எந்த அளவுக்கு அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் அறிந்தோம். தங்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள், எந்தவிதமாகப் பலவிதமான மோசடிகளுக்கும் அவர்கள் இரையாகின்றனர் என்பது, கடைசியாக, அவர்களுக்குச் சதா வளர்ந்து கொண்டே போகும் கடன் நிலைமை ஆகியவைகளையும், அவர்களுடன் நேரடியான தொடர்பு கொண்டதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம். எங்களுடைய தேவைக்குப் போதுமான துணி முழுவதையும் உடனே நாங்களே தயாரித்துக் கொண்டுவிடும் நிலையில் நாங்கள் இல்லை. ஆகையால், கைத்தறி நெசவாளர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொள்ளுவதே நாங்கள் அடுத்தபடியாகச் செய்ய முடிந்தது. இந்திய மில் நூலைக் கொண்டு கைத்தறியில் தயாரான துணிகள், ஜவுளி வியாபாரிகளிடம் இருந்தோ, கைத்தறிக்காரர்களிடம் இருந்தோ சுலபமாகக் கிடைக்கவில்லை. இந்திய மில்கள் நயமான உயர்ந்த ரக நூல்களைத் தயாரிக்காததால், உயர்ந்த ரகத் துணிகளையெல்லாம் வெளிநாட்டு நூலைக் கொண்டே நெய்து வந்தார்கள். இன்றுகூட, உயர்ந்த ரக நூலை இந்திய ஆலைகள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கின்றன. மிக உயர்ந்த ரக நூலை அவர்கள் தயாரிக்கவே முடியாது. எங்களுக்காகச் சுதேசி நூலை நெய்வதற்கு ஒப்புக் கொள்ளும் நெசவாளரை அதிகச் சிரமத்தின் போரிலேயே நாங்கள் தேடிப் பிடிக்க முடிந்தது. அவர்கள் நெய்யும் துணி முழுவதையும் ஆசிரமம் வாங்கிக் கொண்டு விடுவது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் இசைந்தார்கள். | |
|
|