பக்கம் எண் :

130தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கூறும் வகையில் திருவாரூர்க் கோவிலின் விட்டவாசலுக்கு
அருகிலுள்ள ஒரு பூங்காவினுள், கல் இரதம் ஒன்று உள்ளது.
இந்த இரதத்தின் அடிப்பகுதி மற்றும் சக்கரங்கள், தூண்கள்
ஆகியவை முற்றிலும் கல்லினாலானவை. சோழ மன்னன் குதிரை
ஓட்டுவது போன்ற அமைப்பு பிற்காலத்தில் புதுப்பித்து
அமைக்கப்பட்டதாகும். இக் கல்ரதத்தின் சக்கிரத்தினடியில்
மனுநீதிச் சோழனின் மகன் நசுங்கிக் கிடப்பது போன்ற சிற்ப
அமைப்பு உள்ளது. இரதத்தின் எதிரிலுள்ள தரைப்பகுதியில்
பசுங்கன்று இறந்து கிடத்தல், பசு நீதி மணியை அசைப்பது
போன்ற சிற்பங்கள் உள்ளன. இதனருகிலுள்ள சுவரில்
இக்கதையை விளக்கும் வண்ண ஓவியங்கள் உள்ளன.

5. திருவாரூர்க் கோவிலுக்கு ஐந்து தேர்கள் உள்ளன.
மிகப்பெரிய தேர் சுமார் 200 டன் எடையுள்ளதாகும். இத்தேரின்
மரச் சிற்பங்கள்
வேலைப்பாடுமிக்கதாகும். 1976இல் சேதமடைந்த
இத்தேர் பின் புதுப்பிக்கப்பட்டது.

திருவாரூர் சிவாலயம் நமது பண்பாட்டின் பெருமைக்குரிய
சின்னங்களில் ஒன்றாகும்.

கர்நாடக இசையில் பெரும் புலமையுடையவர்களும், பல
கீர்த்தனங்களை இயற்றியவர்களுமாகிய முத்துச்சாமி தீட்சிதர்,
தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள்
ஆகிய மூவரும்
பிறந்த இடம் திருவாரூர் ஆகும்.

மன்னார்குடி

திருவாரூரிலிருந்து 24 கி.மீ. தொலைவில் மன்னார்குடி
என்ற நகரம் உள்ளது. இங்கு இராஜகோபால சுவாமி என்ற
பெருமாளது கோவில் உள்ளது. இக்கோவில் முதலாம்
குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070-1120) கட்டப்பட்டதாகும்.
சோழர் காலத்தில் இவ்வூர் ‘இராஜாதிராஜ சதுர்வேதி
மங்கலம்’
எனப்பட்டது. தஞ்சை நாயக்க மன்னரான இரகுநாதன்
ஆட்சிக் காலத்தில் இக்கோவிலின் பெரும்பகுதி கட்டப்பட்டது.
தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் இவ்வூர் ‘மன்னார்குடி’ என்ற
பெயரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.