என்ற இடத்தில் ஒரு திங்கள் காத்துக் கொண்டிருந்தான். அவன் நின்றபக்கமே சோமேசுவரன் திரும்பவில்லை. ஆனால், அவன் ‘ஓடி மேலைக் கடலில் ஒளிந்துகொண்டான்.’ இக் கோழைத்தனத்தைக் கண்டு ஏமாற்றமும் வெகுளியும் கொண்ட வீரராசேந்திரன் துங்கபத்திரையின் கரையின்மேல் வெற்றித் தூண் ஒன்றை நாட்டிவிட்டு, சோமேசுவரனின் கொடும்பாவி ஒன்றைக் கட்டியடித்துவிட்டுத் தன் நாடு திரும்பினான். சோமேசுவரனோ மிகக் கொடியதொரு காய்ச்சல்வாய்ப்பட்டுத் துங்கபத்திரையில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டான். வீரராசேந்திரன் வேங்கிக்குத் தன் படைகளைச் செலுத்திச் சென்று விசயவாடாவுக்கு அண்மையில் தன்னை எதிர்த்து நின்ற மேலைச் சளுக்கப் படையொன்றை முறியடித்து, வேங்கியில் தன் ஆட்சியை நிலைநாட்டிவிட்டுக் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பினான். இலங்கையில் மீண்டும் கிளர்ச்சி ஒன்று புகைந்தது. வீரராசேந்திரன் படையொன்றை அங்கு அனுப்பி அக்கிளர்ச்சியை ஒடுங்கினான். அவன் தானும் கடல் கடந்து படை செலுத்திக் கடாரத்தை வென்று (கி.பி. 1069) தன்னுடன் நட்புறவு பூண்டிருந்த மன்னன் ஒருவனை கடாரத்தின் அரியணை மேல் ஏற்றுவித்தான். வடக்கில் மீண்டும் போர் முழக்கம் எழுந்தது. முதலாம் சோமேசுவரனையடுத்து முடிசூட்டிக்கொண்ட இரண்டாம் சோமேசுவரன் (கி.பி. 1068-76) சோழரை எதிர்த்துப் போர்க் கோலங்கொண்டான். மீண்டும் ஒருமுறை வீரராசேந்திரன் படை திரட்டிச் சென்றான். சளுக்கருக்கும் சோழருக்கும் இடையே விளைந்த போரில் சோமேசுவரன், வீரராசேந்திரன் ஆகிய இருவருமே வெற்றிக்கு உரிமை கொண்டாடினர். இரண்டாம் சோமேசுவரனுக்கும் அவனுடைய தம்பி ஆறாம் விக்கிரமாதித்தனுக்கும் (கி.பி. 1068-76) இடையே அரசுரிமைப் பூசல்கள் மூண்டன. விக்கிரமாதித்தன் சோழரின் படைத் துணையை நாடினான். வீரராசேந்திரனின் தலையீட்டுக்கு அஞ்சிச் சோமேசுவரன் தன் நாட்டை இரண்டாகப் பங்கிட்டு ஒரு பங்கைத் தன் தம்பிக்கு அளித்தான். விக்கிரமாதித்தன் அரசுரிமை பெற்றதுடன் சோழர் குலத்து இளவரசி ஒருத்தியையும் மணந்தான். வீரராசேந்திரன் பல விருதுகளை ஏற்றுக்கொண்டான். சகலபுவனாசிரயன், மேதினிவல்லபன், மகாராசாதிராசா, ஆகவமல்ல குலகாலன், பாண்டிய குலாந்தகன், இராசாசிரயன், வல்லப வல்லபன், வீரசோழன், கரிகாலன் ஆகிய விருதுகள் |