பக்கம் எண் :

கட

கட்டடக் கலை

61


   

பண்டைக் காலத்திலே, அதாவது, பல்லவர் காலம் வரையில் (கி. பி. 10ஆம்
நூற்றாண்டுக்கு முன்பு), திருமால், சிவபெருமான், கொற்றவை முதலிய
தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. திருவுண்ணாழிகை
(கருவறை)யும் அதைச் சார்ந்து அர்த்த மண்டபமும் மட்டும் அக்காலத்தில்
இருந்தன. வேறு மண்டபங்களோ துணைக்கோயில்களோ அக்காலத்தில்
இல்லை.

 

     பிற்காலத்தில், அர்த்த மண்டபத்தைச் சார்ந்தாற் போல் கோயில்
முன்புறத்திலே முகமண்டபம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

 

பரிவார ஆலயங்கள்

 

     கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பிற்காலச் சோழர் ஆட்சியில்
சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டன.
இக்காலத்துக்கு முன்பு சிவன் கோயில்களிலே அம்மனுக்கென்று தனி
ஆலயங்கள் இருந்ததில்லை.தேவாரத்திலே அப்பர், சம்பந்தர், சுந்தரர்
ஆகிய நாயன்மார்கள் சிவபெருமானையும் தேவியையும் பாடியது
உண்மையே. ஆனால், அக்காலத்தில் தேவிக்கென்று சிவன்
கோயிலில் தனியாக ஆலயம் இருந்ததில்லை. தேவிக்கென்று தனி ஆலயம்

இருந்தால், அது சிவபெருமான் ஆலயத்துடன் சேர்ந்து இராமல் தனியாக
இருந்தது. உதாரணமாக, காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மை ஆலயத்தைக்
கூறலாம். நாயன்மார்கள் இந்தத் தேவி ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், இந்த ஆலயம் சிவன் கோயிலில் சேராத தனி ஆலயம் என்பதை
நினைவில் வைக்க வேண்டும்.

 

     கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சோழ அரசரால் அம்மன்
ஆலயங்கள் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்கள்

புதிதாக அமைக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் அறியலாம்.