பக்கம் எண் :

162தமிழ்க்காதல்

மாயோன், மாயோள் என்ற சொற்களுக்கு இந்நிறமே பொருளாகும்.
இளவேனிற் காலத்துத் தோன்றி நிற்கும் மாமரத்தின் தளிர்ச் செறிவையும்
கருஞ்சிவப்பன்ன அதன் நிறப் பொலிவையும் பார்த்த காதலனுக்குத் தன்
காதலியின் மேனிநிறம் நினைவிடை பாய்கின்றது. தன்னவள் ஒருத்திக்குத்தான்
இத் தனிநிறம் இயல்பாக உண்டென்று மயங்கியிருந்தான். இப்போது அந்நிறம்
உடைய தளிரைக் காணும்போது, “இந்நிறம் இதற்கு இயற்கையன்று; என்
காதலியின் மேனி வண்ணத்தைப் பெறவேண்டுமென்று தவங்கிடந்து பெற்றது
போலும்” என்று காரணங் கூறுகின்றான் தலைவன். மாவின் தளிர்போன்ற
மேனியாள் என மாவினை உவமப்படுத்தாது, எயிற்றிபோலும் தளிர் எனத்
தன் அகப்பொருளாகிய தலைவியைப் புறப்பொருளிற் காணுகின்றான்.
காணுகின்ற மாவின் தளிரில், சென்று காணத் துடிக்கும் மங்கையைக்
காண்கின்றான்.


    என்றூழ் நீடிய வேய்பிறங் கழுவத்துக்
    குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து
    உள்ளினே னல்லனோ யானே முள்ளெயிற்றுத்
    திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
    எமதும் உண்டோர் மதிநாள் திங்கள்
    கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே     (நற். 62)

     பொருள் வயிற் சென்று திரும்பி வந்த கணவன் இல்லத் திருந்து
பழைய ஓர் எண்ணத்தை நினைந்து பார்க்கின்றான். “யானை பெருமூச்சு
விட்டாற்போலக் காற்றடிக்கும் மூங்கிற் காட்டுவழியே முன்னொருமுறை
சென்றேன். செல்லுங்கால் குன்றின் மேல் திங்கள் தோன்றி வரக்கண்டேன்.
உடனே எனக்கு என்ன நினைவு தோன்றிற்று தெரியுமா? எனக்கும் ஒரு
சொந்தத் திங்கள் உண்டு. அஃது எனது நாட்டின் மலைமேல் இருக்கின்றது.
இதுபோல் வெறுந்திங்கள் இல்லை; திலகம் இட்ட நெற்றித் திங்கள் அது. ஏ!
குன்றே! உலகத்து ஒரு திங்கள்தான் உண்டு; அது உன் மேலிடத்துள்ளது
என்று செம்மாக்காதே. திலகம் பொலியும் உயர்திணைத் திங்களும் ஒன்று
உண்டுகாண். அது எனக்கே சொந்தம் என எண்ணி இறுமாந்தேன்,
இன்புற்றேன்” எனவாங்கு தலைவன் பழைய இயற்கைக் காட்சியையும்,
அக்காட்சி தந்த காதற் கவர்ச்சியையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றான்.


காதல் நினைப்புக்கள்


     தலைவனது பிரிவுக்காலை தோழி தலைவியை ஆற்றுவாள்; சிலபோது
தலைவியும் தானே ஆறியிருப்பாள். பிரிந்த பேரன்பன் அயல்நாட்டில்

நெடுநாள் தங்கிவிட்டான்; தங்கினாலோ, ஆண்டு அவன் கண்முன்படும்
இன்பக் காட்சிகள் வீட்டை நினையும்படி