| XX இயற்கையைப் படைத்தல் குறிப்பினைப் புலப்படுத்துதற்கு வழிகள் பலவுள; அவ்வழிகளால் புலப்படும் குறிப்புக்களும் பலவுள. காதல் மாந்தர்கள் தம் குறிப்பினை அமைப்பதற்கு நம் முன்னோர் கண்டெத்த இனிய நேரிய நாகரிக வழியே உள்ளுறையுவமமாம். இவ்வுவமத்தால் காதலுள்ளுறையன்றிப் பிறிது பெறப்படாது. பிறகுறிப்புப் பெறப்படுமேல், அஃது உள்ளுறையுவமம் என்ற பெயரைப் பெறாது. இவ்வுலகம் முன்சொல்லியாங்கு இயற்கைப் பொருள்களிலிருந்து அமைய வேண்டும், அமைக்கவேண்டும். புலவன் பொதிய வைக்கும் உட்குறிப்பைப் புனைவதற்கேற்ப இயற்கை ஒழுங்குபெற அமைந்து கிடக்குங்கொல்? தமிழனத்தின் அகத்திணைக்கு ஒத்துவரவேண்டுமென்று கருதியா இறைவன் இயற்கையைப் படைத்தான்? இயற்கைகள் தம் இயல்பில் ஒழுகுகின்றனர். காதலோர்கள் தம் இயல்பில் ஒழுகுகின்றனர். ஈரிடத்து இயல்புகளிலும் ஒத்த கூறுகள் சில பலவுள. அப்போது அகப்புலவன் இயற்கை நிகழ்ச்சியை இயல்பாகவே புனைவான்; எண்ணிய காதற்குறிப்பு அதனுள் புலப்படும். சிலபோது புலப்படுத்த எண்ணம் காதற் குறிப்புகளுக்கு அப்படியே இயற்கை கிடைப்பதில்லை. அதனால் தன் புலமைக்கருவி கொண்டு இயற்கையைத் தொகுத்தும் வகுத்தும் செகுத்தும் இயைத்தும் வேண்டுமளவு செப்பம் செய்து கொள்வான்’ வணங்கா இயற்கையை ஒடித்து வணக்கிக் கொள்வான். சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமலர் ஆரும் ஊர (அகம். 46) ஓர் எருமை தனக்கெனக் கட்டிய கொட்டிலை வெறுத்தது. வீட்டார் தூங்கும் நள்ளிரவில் தன் கயிற்றை அறுத்துக் கொண்டது. வீட்டு முள்வேலியைத் தன் கொம்பினால் எடுத்தெறிந்தது; பின்னர் நேரே நீர்மிக்க வயலுக்குள் மீன்கள் ஓடவும், வள்ளிக்கொடிகள் சிதையவும் வேகமாகச் சென்று, வண்டுகள் ஒலிக்கும் தாமரை மலரைத் தின்றது. அள்ளூர் நன் முல்லையார் ஓர் எருமையின் செயல்களை இங்ஙனம் நிரல்பட அமைத்துக்கொள்ளுவர்; உள்நோக்கம் ஒன்றுவைத்து அதற்கேற்ப அஃறிணையின் போக்கை வழிப்படுத்துவர், எருமைக்கடா, தடையெல்லாம் கடந்து தாமரையைத் தின்னவைப்பர். இதன் |