பக்கம் எண் :

188தமிழ்க்காதல்

மணவுறவுக்குத் தடையில்லை; இழுக்கில்லை. ஏன்? யார்பாலும் மாசில்லை.
சமுதாயம் மாசெனக் கருதுவதில்லை. இதுபோன்ற ஒரு குறிப்புடையதுவே
கைக்கிளை. உள்ளம் புணராமைக்குப் பெண்ணுக்கு உடற் பக்குவமின்மையே
தலையாய காரணம். உள்ளங்கள் ஒன்றவில்லையேயன்றிப் பகையாக வில்லை.
இன்மை பகையகாது. நண்பனிடம் பொருளிருக்கும் என்று கருதி

உதவி கேட்கிறோம்; இல்லை என்று மெய்யாகக் கூறுகின்றான். கொடான்
என்பது முடிபன்று. இருந்தாற் கொடுப்பான் அல்லது மறுப்பான் என்பது
கருத்து. பருவத்தாள் என்று கருதி ஒருவன் உள்ளம் செலுத்துகின்றான்.
அன்னளாக இருப்பின் உடன்குறிப்போ மறுகுறிப்போ காட்டியிருப்பாள்.
பருவமின்மையின் ஏற்றுயாதுமே செய்திலள். நண்பனிடம் கேட்பதுபோல்
இவன் செலுத்தியதும் இயல்பு.


     ஒருவன் தூய உள்ளத்தோடு காதல் நாடினான். அவள் பருவச்
செவ்வியிலள். அதனால் அகத்தளவில் தோன்றிய தன் காதலரும்பைக்
கிள்ளியெறிந்தான். இவன் காதல் நின்றது சிறுபொழுதாயினும் தூயது,
அன்பினது, மாசு தராது என்ற நலத்தால். கைக்கிளை அகத்திணையாயிற்று.
இவ்வகை உள்ளோட்டம் இளைஞர்களுக்கு இயல்பாதலின் கைக்கிளை
அகத்திணையின் கைக்கிளைக் காமம் மேல்வளராது தோன்றியவுடன்
அழிதலின், காதற் குறுங்கரு என்று கூறலாம்.


பிற கைக்கிளைத் தன்மைகள்


     தமிழ் இலக்கியத்தில் அகத்தும் புறத்தும் வரும் பல்வேறு கைக்கிளைகளைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் தொகுத்துக்
காட்டியுள்ளனர் (தொல்.1035). நம்பியகப் பொருளும் புறப்பொருள்
வெண்பாமாலையும் கைக்கிளை பற்றி விரித்துரைக்கின்றன. அவற்றையெல்லாம்
ஈண்டு ஆராய்வது நமக்குப் பயனில்லை. அகத்திணைக் கைக்கிளைக்கும்
ஏனைக் கைக்கிளைக்கட்கும் உரிய பெரிய வேறுபாட்டை இவன் நாம்

தெளிந்து கொண்டாற் போதியது. ஆண்பாற் கைக்கிளை பெண்பாற்
கைக்கிளை என இருபாற் சுற்றுக்கும் ஏனையக் கைக்கிளையில் இடமுண்டு.
தன் ஒருபுடைக் காமத்தை ஆணும் உரைப்பான்; பெண்ணும் உரைப்பாள்.
எனினும் ஆடவன் தான் காமம் கொள்ளும் பெண்ணுக்கு முன்னோ, பெண்
தன் காமத்துக்கு உரியவன் முன்னோ நேர் நின்று உணர்வைப்
புலப்படுத்தலும், உரைத்தலும் இல. கைக்கிளை என்னும் பெயருக்கேற்ப,
எதிர்பாலாரின்றித் தனக்குத் தானே மொழிந்து கொள்ளுவர். சொல்லெதிர்
பெறாமை எல்லாக் கைக்கிளைக்கும் பொது, ஏனைக் கைக்கிளையில்
காதலுறுவாரும் காதற்படுவாறும் எல்லாம் காமஞ்சான்ற பருவமக்களே,
காமத்தை உணரவும் நுகரவும்