பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்223

மருவல்களும் இயற்கைக்குப் புறம்பானவையல்ல, மனித வியல்புக்கு
அப்பாற்பட்டவையும் அல்லவே. இயற்கையும் இயல்பும் பொருந்திய காதல்
மாண்புகள்தாம் நடைமுறையில் பரந்து காணத்தக்கவை.     

     மக்கள் நுதலிய அகனைந் திணையும்
     சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅ    (தொல். 999)

என்பது அரிய பெரிய நூற்பாக்களுள் ஒன்று. இங்கு, மக்கள், என்னும்
சொல் மானிடச்சாதியை அல்லது சமுதாயத்தைப் பொதுவாகக் குறிக்கும்.
இந்நூற்பாவால் தொல்காப்பியர் காட்டும் நுண்ணிய கருத்து என்ன?
ஐந்திணையில் வரும் காதற் பான்மைகள் தனியொருவர் வாழ்க்கையில்
அப்படியே நிகழாதவை; சமுதாய முழுமை நோக்கின் எல்லாம் நிகழ்பவை.
எனவே ஐந்திணைக் காதல் உள்ளது என்று பெறப்படும். எல்லாக்
காதற்றுறையும் ஒரு தனியார் பால் காணப்படாவிட்டாலும், ஒவ்வொரு
காதற்றுறையும் ஒவ்வொருவர்பால் ஆங்காங்குக் காணப்படுதலின், ஐந்திணை
முழுதும் சமுதாய மக்களிடத்துப் பரந்து கிடக்கும் காதலாகவே
கொள்ளவேண்டும். உயிர்க் காட்சிச்சாலை என்பது உலகத்து உள்ள
உயிரினங்களை வகைக்கு ஒன்றாகக் கொண்டு வந்து ஓரிடத்துத் தொகுத்து
வைத்திருக்கும் பொது நிலையமாகும். பார்த்தால் அச்சாலையே
ஓருலகம்போலத் தோன்றும். இடைக்காலத்து யாத்த கோவையிலக்கியம் பல
காதற்கூறுகளையும் ஒருபால் தொகுத்துத் தொடுத்துக் காட்டுதலின், அது
உயிர்க் காட்சிச் சாலை போன்றது. அதனைக் காதற் காட்சிச்

சாலை என்று அழைக்கலாம். இயல்பாக எல்லா உயிரினங்களும் ஓரிடத்துக்
குழுவாகத் தோன்றி வளர்ந்து நிலையாக வாழ்வதில்லைகாண். ஒவ்வொர்
இனமும் தனக்கேற்ற சூழ்நிலையில் வேறுவேறிடத்து வதிகின்றது. இதுதான்
இயற்கை. தமிழர் கண்ட ஐந்திணையும் இன்ன தகைத்தே; தனித் தனி
இயல்புடையதுவே.1


     தொல்காப்பியர் அகப்பொருளை ஒருவர் வழக்காகக் கருதவில்லை;
உலகியல் வழக்காகவே (தொல். 698) கருதினார். ஐந்திணைத் துறைகளே
ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வு முறைப்படி ஆசிரியர் கூறவில்லை. தலைவன்
தலைவி தோழி செவிலி என்றாங்கு மாந்தர்கள் நிலையில் வைத்தே
காதற்றொடர்புகளை நூற்பித்துள்ளார். அதனால் காதலுறுப்பினர் தம்
உள்ளோட்டங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள், வேட்கைகளை நாம்
அறிகின்றோம். காதலியக்கத்தை நிரல் படச் சுட்டாமல், ஒவ்வோர்
ஆளுக்கும் உரிய காதற் பாகங்களைத் தொகுத்துச் சுட்டியுள்ளனர்.
கூற்றுவகைபட ஆசிரியர் யாண்டும் சொல்லிச் செல்லுதலின் ஐந்திணை ஒரு
தொடர் கதையாக நம் எண்ணத்துப்படுதற்கில்லை. அகப்பொருளின்
அமைப்புப் பற்றிப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

 ____________________________________________________
     Cf V.V. S. Aiyar: The Kural: preface