| எழுதியுள்ள அரிய விளக்காமது: “கதைப் போக்கன்று இங்கு நோக்கம்; பலபல நிலைகளில் விளங்கும் இன்ப அன்பின் சிறப்பு நிலையைக் காண்பதே நோக்கம். அந்த அநுபவ நிலையைத் துய்த்தவர் அன்றி, வேறொருவர் அதனைப் பேசுவதற்கு இல்லை. பேசினால் கதையாகிப் புறப்பொருளாகும். அநுபவித்தவர்களே அந்த அநுபவத்தின் போக்கு வீடாகப் பேசுவது கதையன்று; அவர்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சியாம். நாடகப் பேச்சுக்கள் இவ்வாறன்றோ அமைகின்றன? ஆதலின் அகப்பாட்டுக்களைத் தனித்தனி மணியாகக் கொண்டு தொல்காப்பியரும் வள்ளுவரும் கண்டு களிக்கின்றனர். எனவே கூற்று வகையால் காமத்துப்பாலைப் பாடுந் தமிழ் மரபு வேறு எந்த மொழியிலும் காணாத புது மரபு எனலாம்.”1 அகத்திணையின் பொதுவமைப்பையும் ஐந்திணையின் சிறப்பமைப்பையும் தெரிந்து தெளிந்து கொள்வோமேல், சங்க அகப்பாடல்கள் தனிச் செய்யுட்களாகவும், ஒருதுறைச் செய்யுட்களாகவும் தோன்றிய காரணம் புலனாகும். அகத்திணை ஒருதிணையன்று, எழுதிணை; ஓர் உரிப்பொருள் உடையதன்று, ஏழு உரிப்பொருள் கொண்டது. ஐந்திணையும் ஒரு திணையன்று: ஓர் உரிப்பொருள் கொண்டதுமன்று. ஐந்திணை என்று பெயர் வைத்ததும், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று உரிப்பொருள்களைத் தனித்தனியாகக் கொள்ளுவதும் காண்க. அகத்திணைத் துறைகள் தம்முள் தொடர்பற்ற பெற்றியைச் சங்கப்புலவோர் நன்கு அறிகுவர். முறையாக வளர்ந்தோங்கிய அற்றைத் தமிழ்க்கவி அகத்திணையின் முறைகளைக் கசடற மாணவர்க்குக் கற்பித்தது ஆதலின் பிறழ உணர்தற்கும், உணராது பாடுதற்கும் இடமில்லைகாண். அகம் பாடிய புலவோர் நானூற்றை அடுத்தவர் எனினும், யாருமே அகத்திணை முழுதையும் ஒரு கதையாகக் கோவையாக நிரலாகப் பாடியதிலர். பத்துப் பாட்டுள் நான்கு அகப்பாட்டுகள் உள. முல்லைப்பாட்டு 103; நெடுநல்வாடை 188; குறிஞ்சிப்பாட்டு 261; பட்டினப்பாலை 301 அடிகள் உடையன. பரிபாடலில் வரும் 8 அகப்பாடல்கள் 32-140 அடியெல்லை அளவு நீளுவன. கலித்தொகையின் 149 பாக்கள் 11-80 அடி நீளம் கொண்டன. ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை அகநானூறு என்ற தொகை நான்கிலும் கூடிய 1701 பாடல்கள் 3-31 என்ற அடியளவில் அமைந்தன. இங்ஙனம் சங்கப் பனுவலில் தொகைப்பட்ட 1862 அகச்செய்யுட்கள் நீளத்தில் கூடுதல் குறைதல் கொண்டனவாயினும், எல்லாம் ஒரு காதல் நிகழ்ச்சியையே -ஒரு துறையையே- பொருளாக உடையன; ஒரு ____________________________________________________ வள்ளுவர் கண்ட நாடும் காமமும்,ப. 195. |