| என்றின்ன பகுதிகளை இணைத்தும் புதினமாக நாடகமாகச் சிறுகதையாகச் சுவையூட்டியிருக்க மாட்டார்களா? பரத்தை நாட்டத்தைக் கூறுவதால், இலக்கியம் பழுத்த கனியாகி விடுமா? தலைவன் எத்துணைக் கொடுமை செய்யினும் தலைவி தன் கற்பினின்றும் சிறிதும் கலங்காள் என்பதனை வெளிப்படுத்துவதற்கே பரத்தமையைப் புலவர் புனைந்துரைத்தனர் என்பது ஒரு கருத்துரை.1 தலைவியது கற்புடைமையைக் காட்டுதற்காகத் தலைவனை நிறையிலன் ஆக்க வேண்டுமா? தலைவன் நிறைஞனாயின், அதுதலைவியின் கற்புக்கு மேலும் பெருமை தருமன்றோ? தன் கற்புக்குச் சான்றாகக் கணவன் பரத்தமையாடலை எக்கற்பியும் விரும்பாள். இருவரும் ஒத்த நிறையாளர் என்பதுவே இனிய பெரிய இல்லறம். மனைவி நன்கு ஊடல் வேண்டும், ஊடல் மிகின் இன்பம் மிகும் என்பதற்காகக் கணவன் பரத்தையை நச்சிப் பிரிவான் என்ற கருத்து உண்டு.2 மருதத்திணையின் உரிப்பொருளாவது ஊடல். இவ்வூடல் தலைவனது புறவொழுக்கம் காரணமாக வருவது என்று பலர் கொள்ளுவர். கூடலுக்கு இன்றியமையாத முன்னொழுக்கம் ஊடல், அது தலைவனது பரத்தையொழுக்கச் செயலால் பிறப்பது எனின், அங்ஙனம் தோன்றும் ஊடலொடு கூடலும் நல்லின்பம் பயவா. ஐந்திணையுள் ஒன்றான மருதத்திணையை நாகரிகமற்ற திணையாகவே சான்றோர் கருதுவர்மன். ஊடற் கருத்து தான் ஊடவேண்டித் தன் கணவன் ஒழுக்கம் புறம் போய் வருவதை ஒரு மகளும் விரும்பாள். பரத்தைப் பிரிவுப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் எண்ணில. நீ ஊட யான் பிரிந்தேன் என்று தலைவன் எவனும் கூறினானல்லன், நின்பிரிவு என் ஊடலை மிகுத்தது, நம் கூடலை வளமாக்கிற்று என்று எத்தலைவியும் கூறினாளல்லள். பெண்ணுக்கு ஊடல் பிறப்பியல்பு. பருவம் ஏறஏற ஊடுமியல்பும் உடன் வளர்கின்றது. ஊடல் இதுவெனப் பெண்ணிற்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. கற்றுக் கொள்ளும் நிலையில் ஒருத்தி இருப்பாளேல், அவள் பெண்மையுடையவள் ஆகாள். பாயற் காலத்துக் கணவனது இயல்பான சொல்லும் இயல்பான நிலையும் மனைவிக்குப் புலவிப் பொருளாகும். இது பற்றி வள்ளுவம் என்னும் நூலில் வரும் விளக்கத்தைக் காண்க. “புலவி நுணுக்கமாவது யாது? ஓரமளிக்கண் இனி திருக்கும் கணவன்மனைவி குடும்பச்செய்திகளைப் பேசலாகாது. குடிப்பேச்சுக் காரணமாக எழும் புலவி கருத்து வேற்றுமைக்கு இடனாகிப் பாயற் ____________________________________________________ கலித்தொகைச் சொற்பொழிவுகள். ப. 13. இறையனார் அகப்பொருள் உரை. ப. 214. திருக்கோவையார் உரை, ப.354. |