பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்229

பயனைக் கெடுக்கும். ஊடற்குப் பற்றும் காரணங்கள் ஊடும். அப்பொழுது
தோன்றிப் புணர்ச்சியோடு அழியவேண்டும் என்பது வள்ளுவம். ஊடற்கு
முன்னும் புணர்ச்சிக்குப் பின்னும் நின்று நிலைக்கும் நீடிய செய்திகளைப்
புலவிக்காலப் பொருளாகக் கொள்வரேல், இன்பத்தோடு மன நலமும் கெடும்
என்பது ஒருதலை. ‘நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு
சான்றோர் சினம்’ என்பது ஒப்ப, அறிவுக் காதலர் தம் புலவிக் காரணம்
கூடுங் கூட்டத்துப் பிறந்து ஆண்டே மறைய வேண்டும். ‘இப்பிறப்பில்
நின்னைப் பிரியேன்’ என்றான் தலைவன்; மறுபிறப்பில் பிரிவான் என்று
கருத்துக்கொண்டு, தலைவி ஊடினாள். ‘யாரினும் நின்பால் காதலுடையனே’
என்றான் தலைவன்; யாரினும் என்ற சொல்லுக்குத் தன் கணவன் காதலிக்கும்
மகளிர் பலருள்ளும் என்று கருத்துக் கொண்டு தலைவி புலர்ந்தாள்.
‘வேற்றுநாட்டிடைப் பிரிந்த காலத்து நின்னை நினைத்தேன்’ என்றான்
தலைவன்; நினைப்பு என்பது ஒருகால்
மறந்திருந்தார்க்கன்றோ தோன்றும்
என்பதாகக் கருத்து வாங்கிக்கொண்டு இன்பக் காய்வு காய்ந்தாள் தலைவி.
இவ்வெல்லாம் சொல் நுணுக்கம் தலைக்கீடாய் எழுந்த ஊடற்செய்திகள்.
தலைவன் பூச்சூடுதலும், தும்முதலும், அஞ்சித் தும்மல் அடக்குதலும்,
காதல்மிகுதியால் இமையாது தலைவியின் உறுப்புக்களை நோக்குதலுங்கூட,
ஊடற்காரணங்களாய் முடிகின்றன. இன்பக் கிளர்ச்சி செய்யுங் கருத்துக்
கூர்மைமட்டும் புலவி நுணுக்கம் அன்றுகாண்; அக் கூரிய சுவைக்கருத்தும்
முன்னும் பின்னும் தொடராது, எழுதச் சீவிய கோலின் கூர்மை எழுதுங்கால்
ஒடிந்துவிடுதல்போல ஊடலோடு தேய்ந்து அழிவதும் புலவி நுணுக்கம்
ஆகும்.”


     ஊடலுக்கு உண்மையான காரணம் கூடாது. பரத்தையிற் பிரிவுபோலும்
உண்மையான காரணம் இருப்பின், மனைவியின் உள்ளத்துள் எவ்வாறும்
வருத்தம் ஆழ்ந்து கிடக்கும். கூடும் ஆர்வம் தோன்றாது. கூடினாலும்
பெண்ணுள்ளம் மகிழாது. கற்பித்தக் காரணம் தூய ஊடலை அளிக்கும்.
புறத்துச் செயல்கள் மிகுதியுடைய கணவன் நல்லவனாயினும், அவன்மேல்
நம்பாத பார்வை ஓடிக்கொண்டிருக்கும் தலைவிக்கு. சமுதாயத்தில்
ஆடவனுக்குக் கற்பு வரம்பு இல்லாமையே அவள் தன் ஐயப்பார்வைக்குக்
காரணம். பரத்தை நாட்டம் உடையவனாக, வேண்டுமென்றே உட்கொண்டு,
“நண்ணேன் பரத்த நின் மார்பு” (குறள். 1311) என்று புலப்பாள். தலைவனும்
‘என்னை அங்ஙனம் கூறலாமா? பழிக்கலாமா?’ என்று வெகுளமாட்டான்.
அவள் தன் பொய்ப்பழியை அமளிப் பொருளாக மதித்து இன்பம் மலிவான்.
ஆதலின்
மெய்யான பரத்தையிற் பிரிவு தலைவிக்குப் புலவிப் பொருளாம்
எனக் கூறுதல் இன்ப அடிப்படைக்கு எதிராகும்.