பக்கம் எண் :

242தமிழ்க்காதல்

செயல் பெருந்திணையாதலே பொருந்தும் என்பது என் துணிவு.
ஒருநிலைக்காமம் நுகரும் ஆண்தகையே ஐந்திணைத் தலைவன் ஆதற்கு
உரியான் என்று கொள்க.     

  
 பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
    கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
    பொய்கை யூரன் மகளிவள்
    பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே       (ஐங்.97)


     இப்பாடல்தான் ஐந்திணை மருதம் என யான் வேண்டுவது தலைவன்
முற்றும் நல்லவன் ஆயினும், பரத்தன் என்று தலைவி ஊடினாள். தன்
ஒழுக்கத்திற்கு மாசு கற்பிக்கலாமா? பொய்ப்பழி சுமத்தலாமா? என்று
தலைவன் சினந்தானல்லன், பாயற்பூசல் செய்தானல்லன். இது பள்ளியிடைப்
பெண்ணின்
இயல்பு என்று மகிழ்ந்து புலவிநீக்கி மெய்யின்பம் நுகர்ந்தான்.
மேயப்போய் வந்த எருமையின் கோட்டில் பகன்றைக் கொடியின் வெள்ளிய
மலர்கள் செறிந்து கிடந்தன; அதனைக் கண்ட கன்று இது தன் தாயில்லை
என்று ஒருகால் மயங்கியதாம் என்று நகையாடினான்.


அகத்திணையின் தலையான குறிக்கோள்

     அகத்திணையின் உட்பிரிவுகளான கைக்கிளை குறுவடிவாம், ஐந்திணை
நல்வடிவாம். பெருந்திணை மிகைவடிவாம் என்று விளங்கிக் கொண்டோம்.
பரத்தைச் செய்தி அகத்திணையின் பொதுப்பண்பிற்கு உள்ளடங்கி
ஒத்துப்போதலையும் உறழ்ந்தாடித் தெளிந்தோம். உட்பிரிவுகளின்
வடிவங்களும் தனிக்குறிக்கோள்களும் ஒருபுறம் இருப்ப, எழுதிணைகளையும்
இணைக்கும் அடிப்படை யாது? யாண்டுப்போய் இவ்வெல்லாம் முடிகின்றன?
முடியும் இடமாவது பால் நுகரும் உள்ளப் புணர்ச்சி, மெய்தழீஇய
மனக்கலப்பு, உள்ளங்கள் ஒன்றுபடுதல் மட்டும் அகமன்று; உடல்கள் கூடுதல்
மட்டும் அகமன்று; உள்ளமும் உடலும் இரண்டுறவும் இரண்டறவும் கலந்த
இன்பச் செவ்வியே அகம் எனப்படும். இத் தலையாய குறிக்கோளை
எழுதிணைகளும் தமக்கியைந்தாங்கு உடன்பாடு எதிர்மறை முகங்களால்
புலப்படுத் தலைக் கற்றோம். ஐந்திணை உடன்பாட்டு முகம் உடையது;
இயல்பும் விரிவும் பெற்றது. ஆதலின் அகத்திணையின் குறிக்கோள்
ஐந்திணைவழிப் பன்மாணும் விளங்கிக் கொள்கின்றோம்.


உலகு நோக்கு

     அகவிலக்கியத்திற்கு உரிய மக்கள் யார்? தலைவன் தலைவி தோழி
செவிலி பாங்கன் காமக்கிழத்தி என்று கூற்றுக்கள் வருதலின், செல்வச்
சமுதாயத்திற்கே அகக் காதல் வகுக்கப்பட்டது என்று