பக்கம் எண் :

அகத்திணை ஆராய்ச்சி25

     அகத்திணைக்குப் பாடுபொருள் காதலாதலின், காதல் உள்ளத்தோடு
இயைந்ததாதலின், இந்நூலாராய்ச்சி பெரும்பான்மை உளவியல் பிடித்துச்
செல்வதாகும் என்று குறிக்கொள்க. நெஞ்சக்களத்து விளையாடுங் காதலை
ஆய் பொருளாகக் கொண்டவர்க்குப் பாலுளக் கல்வி-ஆண் பெண் காமம்
பற்றிய பாலறிவு-தெரியவேண்டும். மேலைநாட்டுப் பால்நூற்களிலிருந்து சிற்சில
மேற்கோள்களை இந்நூலிடைக் காணலாம். பிறநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி
மதுகையாற் கண்ட பாலியல் மாண்பெல்லாம் தமிழ் அகவிலக்கியத்துப் பண்டும்
உண்டு எனக் காட்ட முனைதல் (ஒருவர்க்குக் குற்றமின்றேனும்) என்
உட்கிடையன்று. அகத்திணைக்கு அடித்தளமாம் காதற்கூறுகள் இற்றைய
பாலியலறிஞர்க்கும் உடன் பாடாவனவே என்று விளக்குமுகத்தால் அம்
மேற்கோள்கள் வேண்டப்பட்டன.


     என் ஆராய்ச்சிக்குத்தலையாய நெறி உளவியல் மேற்றாகலின்,
அகப்பாட்டின் இலக்கிய வனப்பை ஈண்டுப் பெரிதும் கூறிற்றிலன்.
அகப்புலவர்களை ஆராயுங்காலும் காதல் மாந்தரின் பாலுணர்ச்சிகளைப்
புலப்படுத்தும் ஆற்றல் அன்னோர் எவ்வளவு உடையவர் என்பது குறித்தே
விளக்கம் செய்தேன்.


     அகத்திணையின் அடிக்கூறுகளையும் அகச்சான்றோரின் பால்பாடுந்
திறத்தையும் தெளிவித்தற்கு வேண்டுந் துணையே இயற்கை யாராய்ச்சி
இந்நூலகத்து வருவதாகும்.


                             V


     இனி நூலினுட் புகுத்து, அகத்திணையின் தொகைவகை முறை
தோற்றங்களையும், பிறர் கருத்தின் தகவு தகாமைகளையும், புலமையின் ஆழ
அகலங்களையும் சீர்பெற ஓர்ந்து காண்பதற்கு முன்னர், வரும்
இயல்கள்தோறும் அமைந்துகிடக்கும் பொருட் பொதிவைக் குறிப்பாக இவண்
எழுதுவன்.


     2. அகத்திணைப் பாகுபாடு என்னும் இயலில், அகத்திணையின் முழு
வனப்புத் தோன்றக் காணலாம். இத்திணை எழுவகைப்படும். இவ்வகைகளுக்கு
நிலப்பிரிவு காரணமன்று; காதல் மாந்தரின் மனப்பாங்கு - பாலொழுக்கமே-
காரணமாம். அகத்திணையும் ஐந்திணையும் ஒன்றல்ல, ஒரு பொருட்கிளவிகள்
அல்ல; ஒன்றெனக் கருதிய முதற்பிழை பல பிழைகட்குத் தாயாயிற்று.
அகத்திணையின் உயிர்நாடி காதலோரின் உள்ளப் புணர்ச்சியல்லது
பிறிதில்லை. ஐந்திணைக்குரிய களவு கற்பு நெறிகளின் பொதுவியல்பு, பல்வேறு
துறைகளுக்குக் காணப்படும்
பாடற்றொகை, ஒவ்வோர் துறையைச் சிறந்து
பாடிய புலவோர்கள், கைக்கிளை பெருந்