பக்கம் எண் :

262தமிழ்க்காதல்

நிலத்தின்கீழ் நீரோட்டம் போல அறாது ஓடி வருகின்றது. நாளைப் பாடும்
பாட்டிலும், உரைநடையிலுங் கூட காதற்றுறையில் அகநெஞ்சங்களைக்
காணலாம். இது தமிழிலக்கியப் பொதுமரபு.


     கோவலன் கண்ணகியோடு கூடிய தலைநாட்புணர்ச்சியில் ஆராக் காமம்
துய்க்குங்கால், அவள் நுதலைப் புருவத்தை இடையைக் கண்ணைத் தெய்வ
மேன்மையாகப் பாராட்டுகின்றான்; அவளது சாயலை நடையை மொழியை
இயற்கையினும் ஏற்றம் உடையன என்று புகழ்கின்றான். அணியும் மாலையும்
மணமும் கோலமும் இல்லாமலும், அழகொழுகும் இயற்கை மகள் என்று
காண்கின்றான். கோவலன் பாராட்டுரையில் கையறு நிலை. பாராட்டெடுத்தல்
என்ற அகத்துறைச் சாயல்களைக் காணலாம். குணமாலையை அவளது
மைத்துனர்க்குப் பெற்றோர் மணம் பேசினர். அவளோ சீவகனைக்
காதலித்தவள். தன் கருத்தைச் செவிலிக்கு வெளிப்படுத்தினாள். யான்
விரும்பிய காளைக்கு எந்தையும் யாயும் இசையாவிட்டால், இறப்பேன் அல்லது
தவஞ்செய்வேன்
என்று துணிவுரைத்தாள். நொதுமலர் வரைவு அறத்தொடு
நிற்றல் என்ற அகச்சாயல்களை இச் சீவகசிந்தாமணிப் பகுதியிற் காண்க.

   
 நற்பெரும் பான்மை கூட்ட
         நகைபொதிந் திலங்கு செவ்வாய்
    விற்புரை நுதலின் வேற்கண்
         விளங்கிழை யவரைக் கண்டார்

என்ற சுந்தரர் பரவையார் திருமணத்தில், “உயர்ந்தபாலது ஆணையின் ஒத்த
கிழவனும் கிழத்தியும் காண்ப” (தொல். 1038) என்ற இயற்கைப் புணர்ச்சி
யமைப்பைக் காண்கின்றோம். “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று
சீதை துணியுங்காலைக் கற்பியல் உடன்போக்கை நினைவுறுத்துவர் கம்பர்.

   
 ஒருமகள் தன்னை யுடையேன்
         உலகம்நிறைந்த புகழால்
    திருமகள் போல வளர்த்தேன்
         செங்கண்மால் தான்கொண்டு போனான்


என்ற பெரியாழ்வார் திருமொழியில், மகட்போக்கிய செவிலித்தாய் இரங்கும்
துறைநிலை உண்டு. “சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே”
என்ற அப்பர் பாசுரத்தில், காமம் மிக்க கழிபடர் கிளவியைக் காண்க.
“அன்னை வெறுங் கூடு காவல் கொண்டாள்” என்ற முத்தொள்ளாயிரத்துப்
பாண்டியன் நோக்கிய தலைவி அன்னையால் இற் செறிக்கப்படுகின்றாள்.


     நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
     நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்